காதல்.. கடைசியில் மரணம்.. தற்கொலை என வழக்கு முடித்து வைப்பு! இளவரசன் வழக்கு கடந்து வந்த பாதை
தலித் வாலிபர் இளவரசன் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவத்தை விசாரித்த சிபிசிஐடி அது தற்கொலை என அறிக்கை தாக்கல் செய்தது. அதை ஏற்று ஹைகோர்ட் அந்த வழக்கை தற்கொலை என முடித்து வைத்தது.
சென்னை: தற்கொலை செய்துகொண்டதாக சிபிசிஐடி போலீசார் இறுதி அறிக்கையை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்ததன் பேரில் இளவரசன் தற்கொலை செய்து கொண்டதாக கூறி உயர்நீதிமன்றம் நேற்று, வழக்கை முடித்து வைத்தது.
இளவரசன் என்ற தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த இளைஞரும், திவ்யா என்ற வன்னியர் வகுப்பைச் சேர்ந்த இளம் பெண்ணும் காதலித்து, 2012, அக்டோபர் 10ம் தேதி திருமணம் செய்து கொண்டனர். திருப்பதியில் அவர்கள் திருமணம் செய்து கொண்டதாக கூறப்பட்டது.
இந்நிலையில், திவ்யாவை இளவரசன் கடத்திச் சென்று விட்டதாகச் சொல்லி திவ்யாவின் குடும்பத்தினர் வழக்கு தொடுத்தார்கள். திவ்யாவை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த வேண்டும் என்ற ஆட்கொணர்வு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது, தான் விரும்பியே இளவரசனுடன் சென்றதாக திவ்யா தெரிவித்தார்.
இதன்பிறகு, குடும்ப பஞ்சாயத்து டநந்தது. 2012 நவம்பர் 7: இரு வீட்டாரின் உறவினர்களும் தர்மபுரி அருகே தொப்பூரில் சந்தித்து பேசினர். திவ்யாவோ, அவரின் தாயுடன் செல்ல மறுத்து இளவரசனுடன் சென்றார். வேதனையால், திவ்யாவின் தந்தை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
2012 நவம்பர்: இரு சமூகத்தினரிடையே மோதல் ஏற்பட்டு, நத்தம் காலனி, அண்ணா நகர் மற்றும் கொண்டாம்பட்டி பகுதி மக்களின் வீடுகள் மற்றும் உடைமைகளைச் சிதைத்துத் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன. பின்னர் சில மாதங்கள் கழித்து திவ்யாவின் தாயார் உடல்நிலை சரியில்லை என்று சென்ற திவ்யா அதன் பின்னர் இளவரசன் வீட்டுக்கு திரும்பவில்லை.
2013 ஜூலை 3: திவ்யா உயர்நீதிமன்றத்தில் கொடுத்த வாக்குமூலத்தில் தான் இறுதி வரை தன் தாயுடனேயே வாழ விரும்புவதாகத் தெரிவித்தார். இதையடுத்து அவரது தாயாருடன் அவர் அனுப்பி வைக்கப்பட்டார்.
2013 ஜூலை 4: திவ்யா இனி இளவரசனுடன் சேர்ந்து வாழ விரும்பவில்லை என்று கூறிய மறுநாளான அன்று, இளவரசன் தர்மபுரி அரசு கலைக் கல்லூரிக்குப் பின் உள்ள ரயில்வே தண்டவாளத்தில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இளவரசன் தனது முழுகால் சட்டையில் 4 பக்க கடிதம் ஒன்றை வைத்திருந்தார், இதில் தன் மரணத்திற்கு மற்றவர்கள் காரணமில்லை என்று தெரிவித்திருந்தார்.
இளவரசன் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி ரமேஷ் என்பவர் தொடுத்த வழக்கில், போரூர் இராமச்சந்திரா மருத்துவமனை மருத்துவர்கள் சம்பத்குமார் மற்றும் தங்கராஜ் ஆகியோர் தருமபுரி சென்று ஆய்வு செய்து அறிக்கை அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி அவர்கள் பரிசோதித்து அளித்த அறிக்கையில் முரண்பாடு இருப்பதாகக் கூறி எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்களைக் கொண்டு, உடலை சென்னைக்கு எடுத்து வந்து, மறுபடியும் உடற்கூறு பரிசோதனையை நடத்த உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இரண்டாவது உடற்கூறு பரிசோதனை முடிந்து உடல் அவரின் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இளவரசனின் இறப்புக்கான காரணத்தை கண்டறிய பதவியில் உள்ள நீதிபதி தலைமையில் நீதி விசாரணை நடத்தப்படவேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி உள்ளிட்டோர் கோரிக்கைவிடுத்தனர். அதனைத் தொடர்ந்து ஓய்வுபெற்ற நீதிபதி சிங்காரவேலு தலைமையில் இளவரசன் இறப்புக்கான காரணம் கண்டறியப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. ஆனால், இவரது தலைமையில் நீதிவிசாரனை நடைபெறக் கூடாது என்று இளவரசனின் பெற்றோர் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
நவம்பர் 25 , 2016: இளவரசன் மரண வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என இளவரசனின் தந்தை இளங்கோ தொடுத்த வழக்கில் தலைமை நீதிபதி அமர்வு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டது. இதையடுத்து வழக்கை விசாரித்த சிபிசிஐடி போலீஸ் தரப்பு அறிக்கை தாக்கல் செய்தது அதில் மரணம் ஏற்ப்பட்ட விதம் , உடற்கூறு ஆய்வு அறிக்கை, மரண குறிப்பை ஆய்வு செய்தபோது அவர் தற்கொலை செய்து கொண்டது ஆகியவற்றை வைத்து பார்க்கும் போது இளவரசன் மரணம் தற்கொலை என்று கூறியிருந்தது.
2017, பிப்ரவரி 21: இந்த வழக்கு ஹைகோர்ட்டில் விசாரணைக்கு வந்தபோது சிபிசிஐடி அறிக்கையை ஏற்று வழக்கை முடித்துவைப்பதாக உயர்நீதிமன்றம் அறிவித்தது. இதையடுத்து நான்காண்டு கால வழக்கு முடிவுக்கு வந்தது.