கீழே விழுந்ததில் முடங்கிப் போன நெல்லை சிறுவன்... சிகிச்சைக்கு வழியின்றி தவிக்கும் பெற்றோர்!
திருநெல்வேலியைச் சேர்ந்த சிறுவன் கீழே விழுந்ததில் தலையில் அடிபட்டு முடங்கிப்போன நிலையில் அவனுக்கு சிகிச்சை அளிக்க முடியாமல் கூலித் தொழிலாளி பெற்றோர் வேதனையடைந்துள்ளனர்.
திருநெல்வேலி: சேரன்மகாதேவியைச் சேர்ந்த மாணவன் கீழே விழுந்ததில் தலையில் அடிபட்டு முடங்கிப்போன நிலையில், அவனுக்கு சிகிச்சை அளிக்க முடியாமல் கூலித் தொழிலாளி பெற்றோர் வேதனையில் உள்ளனர்.
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள சேரன்மகாதேவியில் படிப்பு மற்றும் விளையாட்டில் சுட்டியாக இருந்த 3 ஆம்வகுப்பு மாணவன் எதிர்பாராமல் தவறி விழுந்ததில் நடமாடமுடியாத நிலைக்கு ஆளாகியுள்ளான்.
சேரன்மகாதேவி வடக்குசாலைத் தெருவை சேர்ந்தவர் நம்பி, கூலித்தொழிலாளியான இவருக்கு திருமணமாகி இரண்டு மகன், ஒரு மகள் உட்பட 3 குழந்தைகள் உள்ளனர். இவர்களில் 2வது மகன் செல்வமகேஷ் அருகில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 3ம் வகுப்பு படித்து வந்தான்.
முடங்கிப்போன சிறுவன்
படிப்பு மற்றும் விளையாட்டில் சிறந்து விளங்கிய செல்வமகேஷ் ஜூலை மாதம் தவறி கீழே விழுந்ததில் பின் தலையில் அடிபட்டு மூளை நரம்பு பாதிக்கப்பட்டது. இதனால் அவனால் கைகால்களை இயக்க முடியாத நிலை ஏற்பட்டது. மேலும் படுத்த நிலையில் இருந்து எழுந்திருக்க முடியாமல் அடுத்தவர் தூக்கிவைக்கும் நிலை ஏற்பட்டு படுத்தப் படுக்கையாகிவிட்டான்.
ஏழ்மையில் தவிக்கும் பெற்றோர்
இதையடுத்து திருவனந்தபுரம் சித்திரைத் திருநாள் மருத்துவமனையில் சிகிச்சைக்குச் சென்றும் தொடர்ந்து சிகிச்சை பெற முடியாத ஏழ்மை நிலையால் சிகிச்சை எடுக்காமல் திரும்பி வந்துள்ளனர் செல்வமகேஷ் பெற்றோர். இங்கு வேலைக்குச் சென்றால்தான் உணவுக்கு வழி என்ற நிலையில் இரண்டு குழந்தைகளை வீட்டில் விட்டு விட்டு கேரளாவில் தங்கி சிகிச்சை பெற முடியாததால் சிகிச்சை பெறாமல் திரும்பி வந்துள்ளனர்.
கவனிக்க முடியாத நிலையில் பெற்றோர்
இதனால் ஓடியாடி விளையாடிய செல்வமகேஷ் படுத்த நிலையில் இருப்பதைப் பார்த்து அக்கம் பக்கத்திலுள்ளவர்களும் பரிதாபப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் தொடர் சிகிச்சை செய்ய முடியாமலும் இரண்டு குழந்தைகளைக் கவனிக்க முடியாத நிலையில் செல்வமகேஷ் பெற்றோர் நடைபிணமாக திரிகின்றனர்.
குழந்தையின் வாழ்வில் ஒளியேற்றலாம்
செல்வமகேஷ் சிகிச்சைக்கு மருத்துவ சிகிச்சைக்கு உதவ முன் வந்தால் ஒரு எளிய குடும்பம் மீண்டும் குதூகலமாகும். இந்த குழந்தைக்கு உதவ நினைப்பவர்கள் 7708543782 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தங்களது உதவிகளை செய்யலாம்.