ஆர்.கே.நகருக்குள் பல கோடி ரூபாய் பணம் கொண்டு செல்லப்பட்டது எப்படி? திடுக் தகவல் !
தேர்தல் ஆணையத்தின் பல கட்ட சோதனையையும் தாண்டி ஆர்.கே.நகர் தொகுதி வாக்காளர்களுக்கு வழங்க ரூ.80 கோடி அளவுக்கு பணம் மின்சார ரயில் மூலம்தான் கொண்டு செல்லப்பட்டிருக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை: தேர்தல் ஆணையத்தின் பல கட்ட சோதனையையும் தாண்டி ஆர்.கே.நகர் தொகுதி வாக்காளர்களுக்கு வழங்க ரூ.80 கோடி அளவுக்கு பணம் மின்சார ரயில் மூலம்தான் கொண்டு செல்லப்பட்டிருக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
ஆர்.கே.நகருக்கு இடைத்தேர்தல் நடைபெற இன்னும் 3 நாள்களே உள்ள நிலையில், நாளுக்கு நாளுக்கு பணப்பட்டுவாடா பயங்கரமாக திருமங்கலத்தை விஞ்சும் அளவுக்கு நடந்து வருகிறது பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. இதைத் தடுக்க தேர்தல் ஆணையமும் பல்வேறு வகையில் கண்காணித்து வருகிறது.
பணப்பட்டுவாடாவை தடுக்க இந்தியாவிலேயே முதல் முறையாக நுண் கண்காணிப்பு பார்வையாளர்கள் 70 பேர் நியமிக்கப்பட்டு உள்ளனர். இவர்கள் ஆர்.கே.நகர் தொகுதிக்குள்பட்ட இடங்களில் உள்ள தெருக்கள், சந்து பொந்துகளில் இரு சக்கர வாகனங்களில் ரோந்து சென்று வருகின்றனர்.
இந்த நிலையில் மின்சார ரயில்கள் மூலம் பணப்பட்டுவாடாவுக்கான பணக்கட்டுகள் கடத்தப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஆர்.கே.நகர் தொகுதிக்குட்பட்ட பகுதியில் தண்டையார்பேட்டை, கொருக்குப்பேட்டை, வ.உ.சி. நகர் ஆகிய மூன்று ரயில் நிலையங்கள் உள்ளன.
சென்ட்ரலில் இருந்து வட மாநிலங்கள், ஆந்திராவுக்கு செல்லும் ரயில்கள் இந்த வழியாகத்தான் செல்லும். கும்மிடிப்பூண்டிக்கு இயக்கப்படும் மின்சார ரயில்களும் இந்த வழியாகத் தான் செல்லும்.
இந்த மின்சார ரயில்கள் மூலம் ஆர்.கே.நகர் தொகுதிக்குள் எளிதில் செல்ல முடியும். தேர்தல் அதிகாரிகள் இந்த ரயில் பயணிகளை கண்காணிக்கவில்லை. இதனால் கொருக்குப்பேட்டை, தண்டையார்பேட்டை, வ.உ.சி.நகர் ஆகிய 3 ரயில் நிலையங்களிலும் மக்கள் தங்கள் பைகள், பொருட்களுடன் சோதனையின்றி சென்று வருகிறார்கள்.
இதை ஆர்.கே.நகரில் போட்டியிடுபவர்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி வருகிறார்கள். ரயில் பயணிகள் போல தங்கள் ஆதரவாளர்களை தொகுதிக்குள் பணத்துடன் அனுப்பினார்கள். அந்த வகையில் ரூ.80 கோடி அளவுக்கு பணம் மின்சார ரெயில் மூலம்தான் கொண்டு செல்லப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
தேர்தல் கமிஷன் அதிகாரிகளுக்கு மின்சார ரெயில்கள் மூலம் பணம் கடத்தப்பட்டது தற்போதுதான் தெரிய வந்துள்ளது. இதையடுத்து ரயில் பயணிகளிடமும் சோதனை நடத்துவதற்கு அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள். எத்தனை சோதனைகள் செய்தாலும் அவர்களது கண்ணில் மண்ணை தூவிவிட்டு பண வினியோகத்தில் கட்சியினர் ஈடுபட்டு வருகின்றனர்.