"உன்னை எம்.எல்.ஏ ஆக விடமாட்டோம்” - தேனி அதிமுக மாசெ குறித்து அவதூறு போஸ்டர்!
தேனி: தேனியில் அதிமுக செயலாளரான சிவக்குமார் என்பவரை எம்.எல்.ஏ ஆக விடமாட்டோம் என்ற வாசகங்களுடன் சிலர் போஸ்டர் அடித்து ஒட்டிய சம்பவம் அங்கு பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்ட அதிமுக மாவட்ட செயலாளராகவும், கம்பம் நகர் மன்ற தலைவராகவும் இருப்பவர் டி.டி.சிவக்குமார். இவரைப் பற்றி தேனி மாவட்டம் முழுவதும் ஒட்டப்பட்டுள்ள அந்த போஸ்டரில், "பசுத்தோல் போர்த்திய புலி...உன் ஆணவம் அழியும்...உன்னை எம்.எல்.ஏ ஆக விடமாட்டோம்" என்றெல்லாம் தாறுமாறான வாசகங்களை பிரிண்ட் செய்து ஒட்டியுள்ளனர்.
இப்படிப்பட்ட சர்ச்சைக்குரிய போஸ்டரை ஒட்டியது யார் என்று தெரியவில்லை. இரவோடு இரவாக அவ்வளவு போஸ்டர்களையும் ஒட்டியது யார் என்று சிவக்குமார் தரப்பினர் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் போஸ்டரில் ஒரு சமூகத்தைச் சேர்ந்த குழு என்றும் பெயரிட்டுள்ளனர். எனினும், அவர்கள் பெயரில் வேறு யாரோ ஒருவருடைய சில்மிஷ வேலையாக இருக்கலாம் என்று சிவக்குமார் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
தேனி, கம்பம், பெரியகுளம், போடி, சின்னமளுர், ஆண்டிப்பட்டி, கூடலுர், உத்தமபாளையம் உள்பட மாவட்டங்களின் பல பகுதிகளில் இந்த போஸ்டர் ஒரே நேரத்தில் ஒட்டப்பட்டுள்ளது. போஸ்டர்கள் கிழிக்கப்பட்டுவிட்டாலும், இந்த போஸ்டரை ஒட்டியவர்கள் யார் என்று இதுவரை போலீசாரால் கண்டறிய முடியவில்லை. இந்நிலையில் தேனி அரசியல் வட்டாரத்தில் இந்த போஸ்டர் விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.