காவிரி: நாளை முதல் இரு சக்கர வாகன பிரசார பயணம்- பி.ஆர்.பாண்டியன்
காவிரி விவகாரம் தொடர்பாக இரு சக்கர வாகன பிரச்சாரம் நாளை தொடங்க உள்ளது.
மன்னார்குடி: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி நாளை முதல் தமிழகம் முழுவதும் இரு சக்கர வாகன பரப்புரை பயணம் நடைபெற உள்ளதாக பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன்
மன்னார்குடியில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, காவிரி பிரச்சினையில் தமிழகம் தொடர்ந்து வஞ்சிக்கப்பட்டு வருகிறது. காவிரி உரிமை மீட்பு போராட்டத்தில் அனைத்து கட்சிகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.
காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை பின்பற்றி, உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம், பங்கீட்டு ஒழுங்காற்றுக்குழு அமைக்க வலியுறுத்தி, இரு சக்கர வாகனம் பரப்புரை பயணத்தில் ஈடுபட போகிறோம்.
நாளை காலை 8 மணிக்கு வேதாரண்யம் இராஜாஜி பூங்கா அருகிலிருந்து இந்த பரப்புரை பயணம் எனது தலைமையில் துவங்குகிறது. 100க்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்களில் தொடங்கவுள்ள இந்த பரப்புரை பயணத்தை மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமிமுன்அன்சாரி எம்எல்ஏ துவக்கி வைக்கிறார். இந்த பிரச்சார பயணத்திற்கு மதிமுக தனது முழு ஆதரவை தெரிவித்துள்ளது.
இந்த பிரச்சார பயணம் நாகை, திருவாரூர், திருச்சி, கரூர், திருப்பூர், ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், காஞ்சிபுரம் வழியாக சென்னையை அடைகிறது. இதைத்தொடர்ந்து விழுப்புரம், புதுச்சேரி, கடலூர், காரைக்கால், வழியாக திருவாரூர் மனுநீதி சோழன் சிலையிடம் நீதி கேட்டு ஏப்.29-ல் பயணம் நிறைவு பெறும்.
விவசாயிகள் சங்கம், அரசியல் கட்சிகள், வணிகர் சங்கங்கள் உள்ளிட்ட சேவை அமைப்புகளின் தலைவர்கள் பங்கேற்கிறார்கள்.
இவ்வாறு பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார்.