ஹிட்லரின் டெலிபோன் ஏலத்துக்கு வருகிறது.. ஆரம்ப விலை ரூ.67 லட்சம் !
இரண்டாம் உலகப்போரின்போது ஹிட்லர் பயன்படுத்திய தொலைபேசி ஏலத்துக்கு வருகிறது.
வாஷிங்டன்: ஜெர்மனியின் சர்வாதிகாரி ஹிட்லர் பயன்படுத்திய சிவப்பு நிற டெலிபோன் ஒன்று ஏலம் விடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த டெலிபோனின் ஆரம்ப விலை 1 லட்சம் டாலராக (சுமார் ரூ.67 லட்சம்) இருக்கும் என ஏல நிறுவனம் தெரிவித்துள்ளது.
உலக சர்வாதிகாரிகளில் ஒருவராக திகழ்ந்தவர் அடால்ப் ஹிட்லர். சர்வாதிகாரியாக வாழ்ந்த அடால்ப் ஹிட்லர் பல்வேறு தீய செயல்களை செய்து உலக மக்களின் மனதில் கொடுங்கோலனாக சரித்திரத்தில் சர்வாதிகாரியாக பதிவாகியுள்ளவர்.
ஜெர்மனியின் பெர்லின் நகரில் உள்ள பதுங்கு குழியில் ஹிட்லர் பதுங்கியிருந்த காலத்தில், ஹிட்லர் படைக்கும் சோவியத் ரஷ்ய படைக்கும் இடையில் போர் நடந்தது. அதில் ஹிட்லர் படை தோல்வியடைந்தது. இதனால் மனைவி இவா பிரானுடன் ஹிட்லர் தற்கொலை செய்து கொண்டார் என்கிறது சரித்திரம்.
இதையடுத்து அந்த பதுங்கு குழியில் ரஷ்ய அதிகாரிகள் சோதனை நடத்திய போது, ஹிட்லர் பயன்படுத்திய சிவப்பு நிற டெலிபோன் ஒன்றை கண்டுபிடித்தனர். அதன் பிறகு அந்த டெலிபோன் இங்கிலாந்து அரசியல் கட்சியை சேர்ந்த பிரிகேடியர் சர் ரால்ப் ரேனருக்கு பரிசாக அளிக்கப்பட்டது.
இப்போது அந்த தொலைபேசியை அவரது மகன் ஏலத்துக்கு கொண்டு வருகிறார். ஹிட்லரின் நாஜிப் படையின் முத்திரை மற்றும் பின்புறத்தில் ஹிட்லரின் பெயர் பதிக்கப்பட்டுள்ள அந்த டெலிபோனின் ஆரம்ப விலை 1 லட்சம் டாலராக (சுமார் ரூ.67 லட்சம்) இருக்கும் என ஏல நிறுவனமான அலெக்சாண்டர் ஏல நிறுவனம் கூறுகிறது. அதிகபட்சமாக 3 லட்சம் டாலருக்கு (சுமார் ரூ. 2 கோடியே 1 லட்சம்) ஏலம் போகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஹிட்லர் தனது உருவத்திற்கு கூட காப்புரிமை பெற்று வைத்திருந்து குறிப்பிடத்தக்கது.