குட்டி நாயை தூக்கி எறிந்து கொடுமைப்படுத்தும் கொடூரன்.. வைரலான வீடியோ.. சென்னை போலீசில் புகார்
சென்னை: உயரமான கட்டிடத்தில் இருந்து குட்டி நாயை ஈவு இரக்கமின்றி கீழே எறிந்து அது துன்பப்படுவதை பார்த்து ரசிக்கும் ஒரு கொடூரனின் வீடியோ சமூக தளங்களில் வைரலாகியுள்ளது. சென்னை காவல்துறையில் இதுதொடர்பாக புகார் வழங்கப்பட்டுள்ளது.
பல ஆயிரம் பேரால் பேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப்பில் பகிரப்பட்டு வரும் மனதை உருக்கும் அந்த வீடியோ காட்சி இதுதான்:
உயரமான கட்டிடத்தில் ஆஜானுபாகுவான ஒரு வாலிபர் நிற்கிறார். தனது இடது பக்கம் குட்டி நாய் ஒன்றை பிடித்து வைத்துள்ளார். பிறகு மெதுவாக அதன் கழுத்து பகுதி, முதுகு பகுதி இரண்டையும் ஒரு சேர பிடித்து தூக்கி, அப்படியே அந்தரத்தில் நிறுத்தி பிறகு இரக்கமேயின்றி கீழே விடுகிறார்.
நாய் அலறியபடியே கீழே விழுந்து வலியால் கதறுகிறது. இந்த காட்சிகள் வீடியோவில் படம் பிடிக்கப்படுகின்றன. நாய் கஷ்டப்படுவதை பார்த்து சந்தோஷப்படும் கொடூர புத்தி கொண்ட அந்த கொடூரன் யார் என்பதே இப்போது சமூக தளங்களில் அலசப்படும் டாப்பிக்காக உள்ளது.
அந்த நபரையும், சம்பவ இடத்தையும் பார்க்கும்போது அது தமிழ்நாடாக இருக்கும் எனவே தெரிகிறது. சல்லை கண்ணன் என்பவர் இந்த வீடியோவை பேஸ்புக்கில் பதிந்து, அந்த நபரை கைது செய்ய உதவுவோருக்கு ரூ.1 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
மேலும், அந்தோணி ருப்பின் என்பவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், இந்த வீடியோ குறித்து புகார் அளித்துள்ளதாகவும் பேஸ்புக் பதிவு ஒன்றில் கண்ணன் குறிப்பிட்டுள்ளார்.