வாணியம்பாடி- வியாபாரிகளின் பழங்களை நடுவீதியில் கொட்டி கவிழ்த்த ஆணையர்- வைரலான வீடியோ
வாணியம்பாடி: வாணியம்பாடியில் கடைவீதிகளில் வியாபாரிகளின் விற்பனை பொருட்களை நகராட்சி ஆணையர் சிசில் தாமஸ் வீதிகளில் கொட்டி கவிழ்த்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதனையடுத்து ஆணையாளர் சிசில் தாமஸ் தமது நடவடிக்கைக்கு வருத்தம் தெரிவித்தார்.
Recommended Video
சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ நேற்று முதல் வைரலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது. அதில் லாக்டவுன் காலத்தில் திறக்கப்பட்ட பழக்கடைகள், தள்ளுவண்டி கடைகளை வாணியம்பாடி நகராட்சி ஆணையர் சிசில் தாமஸ் அகற்ற நடவடிக்கை மேற்கொள்கிறார்.
நாள்தோறும் அதிகரிப்பு- கொரோனா பாதிப்பில் இந்திய அளவில் 3-வது இடத்தில் தமிழகம்
சமூக வலைதளங்களில் வைரல்
அப்போது தள்ளுவண்டிகளில் இருந்த பழங்களை கீழே வீசி எறிகிறார்; சில வண்டிகளை அப்படியே கொட்டி கவிழ்த்துவிட்டு செல்கிறார். கடைகள் முன்பு வைக்கப்பட்டிருந்த பழக் கூடைகளையும் வீதியில் கவிழ்த்துவிடுகிறார். இந்த வீடியோதான் சமூக வலைதளங்களில் விமர்சனங்களுடன் வைரலாகி வருகிறது.
|
கனிமொழி கண்டனம்
இந்த வீடியோவை தமது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள திமுக எம்.பி. கனிமொழி, வாணியம்பாடி ஆணையரின் இந்த மனிதத்தன்மையற்ற செயலை வன்மையாகக் கண்டிக்கிறேன். ஏழை வியாபாரிகள் என்றால் அவ்வளவு இளக்காரமா ? எளியவர்களிடம் மட்டுமே இவர் போன்றவர்களின் அதிகாரக் கரங்கள் அத்துமீறும். எச்சரிக்கை செய்வதை விடுத்து, இப்படி உணவுப் பொருட்களை கொட்டிக் கவிழ்க்க யார் அதிகாரம் தந்தது ? இவர்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
சர்ச்சைக்குரிய அதிகாரி விளக்கம்
இதனிடையே சர்ச்சைக்குரிய வாணியம்பாடி நகராட்சி ஆணையர் சிசில் தாமஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, காய்கறி, பழ வியாபாரிகளை நாங்கள் பலமுறை எச்சரித்தோம். ஆனாலும் அதே இடங்களில் அவர்கள் விற்பனை செய்து வருவதாக புகார் வந்தது. அப்பகுதியில் ஆய்வுக்கு சென்ற போதும் இதுபற்றி சொல்லி இருந்தேன்.
வியாபாரிகளிடம் வருத்தம்
ஆனாலும் வியாபாரிகள் கேட்கவில்லை. கோயம்பேடு சந்தையில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது போல் உருவாகிவிடக் கூடாது என்ற அச்சத்தால் நடவடிக்கை எடுத்தேன். மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பதற்காக அதை செய்தோம். இதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். மக்களுக்காகத்தான் நாங்கள் கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறோம். கடந்த ஒன்றரை மாதமாக இரவு பகலாக நாங்கள் கண்விழித்து கொரோனா தொற்று நோய் பரவாமல் இருக்க பாடுபட்டு வருகிறோம். எங்கள் நடவடிக்கை குறித்து வியாபாரிகளிடமும் வருத்தத்தை தெரிவித்து கொள்கிறேன் என்றார்.
இழப்பீடு கொடுத்தார் ஆணையர்
மேலும் தம்முடைய தவறுக்காக வியாபாரிகளிடம் நேரில் சென்று வருத்தம் தெரிவித்தார் சிசில் தாமஸ். அத்துடன் தம்மால் கீழே தள்ளிவிடப்பட்ட பழங்களுக்கான இழப்பீட்டையும் நகராட்சி ஆணையர் சிசில் தாமஸ், வியாபாரிகளிடம் கொடுத்தார். அப்போது நகராட்சி விதிகளை முறைப்படி பொதுமக்களும் வியாபாரிகளும் கடைபிடிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
மன அழுத்தமே காரணமே- சீமான்
வாணியம்பாடி நிகழ்வு தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்ட அறிக்கையில், டாஸ்மாக் கடைகளில் நடக்கும் அத்தனை விதி மீறல்களுக்கும் எல்லா விதமான பாதுகாப்பு வசதிகளை ஏற்படுத்தித் தரும் அரசும், அரசு அதிகாரிகளும், வயிற்றுப்பிழைப்புக்காக ஏழைகள் நடத்தும் சாலையோரக்கடைகளில் விதிமீறல் இருந்தாலும் அதற்கு சட்டப்படி நடவடிக்கை எடுக்காமல் மனிதநேயமற்று நடப்பது கண்டிக்கத்தக்கது! கட்டுப்படுத்த முடியாமல் அதிகரித்து வரும் கொரோனா நோய்த்தொற்று, இரவு பகல் பாராது களப்பணியில் தொடர்ச்சியாக ஈடுபட்டுவரும் அரசு அதிகாரிகளின் மன அழுத்தத்தை அதிகப்படுத்தியுள்ளது என்பதையே இந்நிகழ்வு குறித்த வாணியம்பாடி ஆணையரின் வருத்தம் வெளிப்படுத்துகிறது. எனவே, கொரோனா நோய்த்தொற்று பரவல் தடுப்புப் பணியில் தொடர்ச்சியாக ஈடுபட்டுவரும் அரசு அதிகாரிகளின் மன அழுத்தத்தை குறைக்கும் வழிகளில் கவனம் செலுத்த வேண்டும். அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளின்படி கடைகள் இயங்குவதை உறுதிசெய்ய வேண்டும் என்றார்.