எங்கள் ஊரில்தான் டாஸ்மாக் திறக்கனும்.. பஞ்சாயத்தில் தீர்மானம்.. திருப்பூர் அருகே இப்படி ஒரு கிராமம்
டாஸ்மாக் வேண்டாம் என்று போராடும் மக்கள் மத்தியில்,எங்கள் கிராமத்தில் டாஸ்மாக் மதுபானக் கடையைத் திறந்துகொள்ளுங்கள் என்று ஆதரவு தெரிவித்து விநோத கிராமமாக மாறியுள்ளது வீரணம்பாளையம்.
திருப்பூர்:தமிழ்நாடே ஒன்றுதிரண்டு டாஸ்மாக் கடையை திறக்க வேண்டாம்,இருக்கும் கடைகளை மூடுங்கள் என்று நாளுக்குநாள் முதல்வருக்கு கோரிக்கை விடுத்து வருகிறது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் தினமும் ஏதாவது ஒரு டாஸ்மாக் கடை முன்பு பொதுமக்கள் கூடி போராட்டம் நடத்துகிறார்கள்.
இந்த நிலையில் திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகில் உள்ள வீரணம்பாளையம் கிராம பஞ்சாயத்துக் கூட்டத்தில் டாஸ்மாக் மதுக்கடையை திறந்துகொள்ளுங்கள் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.இது டாஸ்மாக் எதிர்ப்புப் போராட்டக்காரர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மே தினத்தை முன்னிட்டு காங்கேயம் ஒன்றிய ஊராட்சிகளில் நேற்று கிராம பஞ்சாயத்து கூட்டங்கள் நடைபெற்றன.வீரணம்பாளையம் ஊராட்சியில் நடந்த கூட்டத்தில், டாஸ்மாக் கடை அமைக்க பஞ்சாயத்து உறுப்பினர்கள் அனுமதியளித்துள்ளனர்.
அங்கு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில்," குடியிருப்புப் பகுதி, பொதுமக்கள் அதிகம் கூடும் இடம், கோயில், பள்ளி கல்லூரிகள் அருகே மதுக்கடை இல்லாமல், அரசு விதிகளின்படி வீரணம்பாளையம் ஊராட்சியில் டாஸ்மாக்கடை அமைத்துக்கொள்ள சம்மதிக்கிறோம். மேலும், வீரணம்பாளையம் ஊராட்சி காங்கேயம் நகராட்சியை ஒட்டிய பகுதி என்பதால் போலி மதுபானம் விற்பனையை தடுக்கும் வகையில் அரசு டாஸ்மாக் கடை அமைத்துக்கொள்ள ஊர் பொதுமக்கள் சம்மதம் தெரிவிக்கிறோம்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையடுத்து,மக்களின் எதிர்ப்பு இல்லாமல் காங்கேயம் தாலுகாவில் இரண்டாவது டாஸ்மாக் கடை திறப்பது உறுதியாகியிருக்கிறது.