குளித்தலை அருகே பொது மக்கள் தேர்தல் புறக்கணிப்பு
கரூர்: குளித்தலை அருகே சாலை வசதி செய்து தரக் கோரி பொது மக்கள் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர்.
கரூர் மாவட்டம், தோகமலை ஒன்றியம் தளிஞ்சி ஊராட்சிக்கு உட்பட்ட புரசம்பட்டி, புரசம்பட்டி காலனி, எம்.ஜி.ஆர்.நகர் ஆகிய பகுதிகளை சேர்ந்த பொது மக்கள் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக நங்கவரம் புரசம்பட்டி இணைப்பு சாலையை சரி செய்து தரக்கோரி அதிமுக, திமுக ஆகிய இரண்டு அரசுகளிடமும் கோரிக்கை வைத்து வைத்து வருகின்றனர். ஆனால் திமுக மற்றும் அதிமுக ஆகிய இரண்டு அரசுகளும் அவர்களின் கோரிக்கையை காது கொடுத்து கேட்கவில்லை.
இதனால் ஆவேசம் அடைந்த பொது மக்கள் மனு நீதி நாளான திங்கட்கிழமை அன்று கரூர் மாவட்ட ஆட்சியரிடம் நேரில் சென்று மனுக்களை அளித்தனர். மேலும், தங்களது கோரிக்கையை வலுயுறுத்தி பல முறை பல்வேறு வித போராட்டங்களை நடத்திவிட்டனர். ஆனாலும் மாவட்ட நிர்வாகமும் சரி, தமிழக அரசும் சரி அசைந்து கொடுப்பதாக தெரியவில்லை.
இதனால் விரக்தியின் உச்சத்திற்கே சென்ற அவர்கள் வரும் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிப்பு செய்ய போவதாக நேரு இளைஞர் நற்பணி மன்றம், அனைத்து மகளிர் மன்றம் மற்றும் பொது மக்கள் முடிவு செய்து அறிவித்துள்ளனர்.