தேர்தல் ஆணையத்திற்கு ரூ. 12,000 டிடி அனுப்பிய ஸ்ரீரங்கம் வாக்காளர்... ஓட்டுக்குக் கொடுத்ததாக புகார்!
திருச்சி : ஸ்ரீரங்கம் தொகுதி வாக்காளர் ஒருவர், தன்னையும், தன் குடும்பத்தாரையும் வற்புறுத்தி குறிப்பிட்ட கட்சியினர் ஓட்டுக்கு பணம் கொடுத்ததாக தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும் கட்சியினர் கொடுத்ததாக ரூ. 12 ஆயிரம் ரூபாயையும் அவர் டிராப்டாக அனுப்பியுள்ளார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்றதையடுத்து ஸ்ரீரங்கம் சட்டசபை உறுப்பினர் மற்றும் தமிழக முதல்வர் பதவியை இழந்தார் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா. அதனைத் தொடர்ந்து கடந்த மாதம் 13ம் தேதி ஸ்ரீரங்கம் சட்டசபைத் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில், 82.5 சதவீதம் வாக்குகள் பதிவாகின. அதிமுக அமோக வெற்றி பெற்றது.
ஆனால், ஓட்டுக்கு பணம் கொடுக்கப்பட்டதாகவும், வீட்டுக்கு வீடு பணம், பரிசு பொருட்கள் வினியோகம் செய்யப்பட்டதாகவும் அரசியல் கட்சிகள் ஒன்றை ஒன்று குற்றம் சாட்டிக் கொண்டன. தேர்தல் கமிஷனுக்கும் அரசியல் கட்சிகள் சார்பில் புகார்கள் கூறப்பட்டன. இது தொடர்பாக சிலர் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஸ்ரீரங்கம் தொகுதி வாக்காளர் ஒருவர் தனது குடும்பத்துக்கு ஓட்டுப் போட பணம் கொடுக்கப்பட்டதாக கூறி டெல்லி தலைமை தேர்தல் கமிஷனுக்கு ரூ. 12 ஆயிரத்துக்கான டிராப்ட்டை அனுப்பியுள்ளார்.
இது தொடர்பாக அவர் அனுப்பிய புகாரில், ‘'ஸ்ரீரங்கம் இடைத் தேர்தலின் போது ஓட்டுப் போடுவதற்கு எனது குடும்பத்தில் உள்ள 6 பேருக்கு தலா ரூ. 2 ஆயிரம் வீதம் ரூ. 12 ஆயிரம் கொடுக்கப்பட்டது. நாங்கள் வேண்டாம் என்று மறுத்த போதும் இந்த பணத்தை கொடுத்து விட்டு சென்று விட்டனர்.
அடையாளம் தெரியாத 10 பேர் பிப்ரவரி 9-ந் தேதி இதை கொடுத்தனர். ஓட்டுப்போடுவதற்கு பணம் கொடுத்ததை நான் ஏற்க வில்லை. எனவே எனது குடும்பத்துக்கு ஓட்டுக்காக கொடுக்கப்பட்ட ரூ. 12 ஆயிரத்தை தங்களுக்கு அனுப்பி வைக்கிறேன்''என்று கூறப்பட்டிருந்தது.
இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கும்படி திருச்சி போலீசாருக்கு தேர்தல் கமிஷன் உத்தரவு பிறப்பிள்ளது. அதனைத் தொடர்ந்து, இது குறித்து திருச்சி போலீசார் இந்திய அரசியல் சட்டப்பிரிவு 171(பி), 171(சி), 171(இ) ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். புகாரில் கூறப்பட்டுள்ள அடையாளம் தெரியாத 10 பேர் மீது இந்த வழக்கு பதிவாகி உள்ளது.
இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும் போது, ‘புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் புகார் கூறியவர் சம்பந்தப்பட்டவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கும்படி கூறவில்லை என்றாலும் நாங்கள் குற்றவாளிகள் குறித்து விசாரணை நடத்தி வருகிறோம்' எனத் தெரிவித்துள்ளார்.