இதுதான் அந்த உயிர்க்கொல்லி சுவர்.. எப்படி நடந்தது பரங்கிமலை ரயில் விபத்து?
Recommended Video
சென்னை: பரங்கிமலையின் 4வது வழித்தடத்தில் மின்சார ரயிலை இயக்கியதுதான் பயணிகள் அடிபட்டு உயிரிழக்க காரணம் என்று தெரியவந்துள்ளது.
பரங்கிமலை 4வது தண்டவாள வழித்தடத்தில், வழக்கமாக எக்ஸ்பிரஸ் ரயில்கள்தான் செல்லும். ஆனால், நேற்று, இன்று, 4வது வழித்தடத்தில் மின்சார ரயில்கள் இயக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
4வது வழித்தடத்தில் தண்டவாளத்தின் மிக அருகே தடுப்பு சுவர் கட்டப்பட்டுள்ளது. இன்று காலை கடற்கரை-திருமால்பூர் மின்சார ரயில் பரங்கிமலை ரயில் நிலையம் அருகே வந்தபோது, இந்த தடுப்பு சுவரில், மோதிதான், படிக்கட்டில் தொங்கியபடி பயணித்த, பயணிகள் அடிபட்டு கீழே விழுந்துள்ளனர்.
கோர விபத்து
இதில், தலை நசுங்கியும், உடல் நசுங்கியும் ரத்த வெள்ளத்தில் 5 பேர் பலியாகியுள்ளனர். நேற்று இரவும் இதேபோன்ற ஒரு விபத்து நடந்ததாகவும், அதில் 2 பேர் பலியானதாகவும், ரயில் பயணிகள் குற்றம்சாட்டுகிறார்கள்.
குறைந்த வேகம்
பயணிகள் தொங்கி கொண்டு பயணித்தபோது, ரயிலை குறைந்த வேகத்தில் இயக்கியிருக்க வேண்டும். அல்லது, தடுப்பு சுவர் இருக்கும் தகவலை பயணிகளுக்கு தெரிவித்து எச்சரித்திருக்க வேண்டும் என்கிறார்கள் பயணிகள்.
கொலைகார சுவர்
மெட்ராஸ் என்ற திரைப்படத்தில், ஒரு சுவர் பலரையும் பலி எடுப்பதாக உருவகப்படுத்தியிருப்பார்கள். பரங்கிமலை ரயில் நிலையத்திலும் கொலைகார சுவராக மாறியுள்ளது, அந்த தடுப்பு சுவர்.
கூட்டம் அதிகம்
இந்த சுவர் பல வருடங்களாக இருப்பதாகவும், கூட்டம் அதிகமாக இருந்ததுதான் விபத்துக்கு காரணம் என்றும் ரயில்வே ஏடிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார். மேலும், சுவரை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும், அதுவரை இந்த தண்டவாளத்தில் ரயிலையே இயக்க மாட்டோம், எனவும் அவர் கூறினார்.