”பச்சைப் பரிவட்டம்...விபூதி அபிஷேகம்...சித்தர்கள் பூஜை” - தென்காசி கோவிலில் பரபரப்பு
தென்காசி: குற்றாலத்தில் பூட்டப்பட்டிருந்த முருகன் கோவில் ஒன்றில் அர்ச்சனை நடைபெற்றிருந்ததால் மக்கள் வியப்பில் ஆழ்ந்துள்ளனர்.
குற்றாலம் அருகே உள்ள குடியிருப்பில் கூத்தரபிரான் கோவில் உள்ளது. இங்கு சிவன், அம்மன் பீடங்கள் மற்றும் விநாயகர், முருகன் சுவாமி சிலைகள் உள்ளன. இந்த கோவில் நிர்வாகியாகவும், பூசாரியாகவும் செண்பகமீனா என்பவர் உள்ளார்.
நேற்று இரவு பூஜைகளை முடித்து 8 மணிக்கு செண்பகமீனா கோவிலை பூட்டி விட்டு சென்றார். இன்று தைப்பூச திருவிழா என்பதால் முருகனுக்கு பூஜை செய்வதற்காக அதிகாலை 4 மணிக்கு அவர் மீண்டும் கோவிலுக்கு வந்தார்.
சுவாமிக்கு விபூதி அபிஷேகம்:
கோவில் நடையை திறந்து பார்த்தபோது உள்ளே இருந்த முருகன் சிலை விபூதி அபிஷேகம் செய்யப்பட்டு, பரிவட்டம் கட்டி அலங்காரத்துடன் இருந்தது. இதை கண்ட செண்பகமீனா ஆச்சரியம் அடைந்தார்.
சித்தர்கள் ராஜ்ஜியம்:
இது குறித்து கோவில் பூசாரி செண்பகமீனா கூறும் போது, "குற்றாலம் மலைப்பகுதியில் ஏராளமான சித்தர்கள் இன்றும் உள்ளனர். அவர்கள் இந்த பகுதியில் உள்ள கோவில்களுக்கு வந்து செல்வது உண்டு.
பச்சை பரிவட்ட ஆராதனை:
இந்த கோவிலில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இன்று நடந்தது போல் பூட்டிய கோவிலுக்குள் இருந்த முருகன் சிலைக்கு சந்தன அபிஷேகம் செய்யப்பட்டிருந்தது. இன்றும் அதுபோல் விபூதி அபிஷேகம் செய்யப்பட்டுள்ளது. முருகனுக்கு கட்டப்பட்டுள்ள பச்சை பரிவட்டம் இந்த கோவிலில் இதுவரை இருந்தது இல்லை. இதை சித்தர்கள்தான் செய்துள்ளனர்" என்றார்.
பக்தர்கள் பரவசம்:
கோவில் அருகே உள்ள பொது மக்களும் அதிகாலை நேரத்தில் கோவிலில் இருந்து மணி சத்தம் கேட்டதாக கூறுகின்றனர். இது குறித்து
தகவல் அறிந்த அப்பகுதி பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கூத்தபிரான் கோவிலுக்கு திரண்டு வந்தனர்.
தென்காசியில் பரபரப்பு:
அலங்காரத்துடன் காட்சி அளித்த முருகன் சிலையை அவர்கள் பக்தி பரவசத்துடன் வணங்கினர். பூட்டிய கோவிலுக்குள் சித்தர்கள் வந்து முருகன் சிலைக்கு அபிஷேகம், அலங்காரம் செய்ததாக கூறப்படும் சம்பவம் குற்றாலம் மற்றும் தென்காசி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.