கியான்ட் புயல் வலுவிழந்தது... அக். 30,31ல் தமிழகத்தில் மழை- சென்னை வானிலை மையம்
தமிழகத்தில் அக்டோபர் 30 மற்றும் 31ம் தேதிகளில் ஒரு சில இடங்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
சென்னை: கியான்ட் புயல் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறி வருவதாகவும், இதன் காரணமாக தமிழகத்தில் அக்டோபர் 30 மற்றும் 31ம் தேதிகளில் ஒரு சில இடங்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
வங்க கடலில், ஒரு வாரமாக சுழன்று கொண்டிருக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக மாறியது , அதற்கு 'கியான்ட்' என பெயரிட்டனர். ஒடிசாவை நோக்கி நகர்ந்த புயல் வறண்ட காற்றின் தாக்கத்தினால் வலுவிழந்தது.
இந்த புயல், நேற்று முன்தின நிலவரப் படி, விசாகப்பட்டினம் மற்றும் ஒடிசாவின் கோபால்பூர் இடையிலான பகுதியை கடக்கும் என, கணக்கிடப்பட்டது. காற்றின் திசை மாறியதால், ஒடிசாவை நோக்கி செல்லாமல், தென்மேற்கு பக்கமாக, ஆந்திராவில், ஓங்கோல் மற்றும் நெல்லுாருக்கு இடைப்பட்ட பகுதியை நோக்கி புயல் நெருங்குவதால் காக்கிநாடா, விஜயவாடா, குண்டூர், ஓங்கோல், காவ்லி, நெல்லுார், திருப்பதி ஆகிய இடங்களில், இன்று முதல் புயல் பாதிப்பால், மழை பெய்யலாம் என, வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
'கியான்ட் புயல், வலுவிழந்த நிலையில் 28ம் தேதி,ஆந்திர கடற்பகுதியை நெருங்கும்போது , கரையை நெருங்கியதும், காற்றழுத்த தாழ்வு மண்டல மாகவும் மாறும் என்று வானிலை ஆய்வு மையம் கூறுகிறது. நேற்று இரவு 11.50 மணி நிலவரப்படி , கியான்ட் புயல், விசாகப்பட்டினத்தில் இருந்து தென் கிழக்கில்,வலுவிழந்து மையம் கொண்டிருந்தது.
இதனிடையே சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன், வங்க கடலில் உருவான புயல் தற்போது வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலையாக மாறி வருவதாக தெரிவித்தார். இதன் காரணமாக நாளை முதல் தமிழக கடலோர மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழகத்தில் இன்றும் நாளையும் கடலோர மாவட்டங்களிலும், உள் மாவட்டங்களிலும் ஒரு சில இடங்களில் மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. தீபாவளி தினமான 29ம் தேதி தமிழகத்தின் ஒரு சில இடங்களில் மழை பெய்யும். விசாகப்பட்டினத்துக்கு தென் கிழக்கே மையம் கொண்டுள்ள கியான்ட் புயல் வலுவிழந்து வருகிறது. கியான்ட் புயல் மேலும் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும் வாய்ப்பு உள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.