ராத்திரி ஆனாலே இதே தொல்லை! குடிகார கணவனால் கடுப்பான மனைவி! நள்ளிரவில் எடுத்த விபரீத முடிவு!
ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அருகே, குடும்பத் தகராறு காரணமாக, கணவனை அடித்துக் கொலை செய்த மனைவி, காவல் நிலையத்தில் சரணடைந்த சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மது பழக்கத்துக்கு அடிமையாகும் நபர்கள், மது போதையில் என்ன செய்கிறோம் என தெரியாமல் செய்யும் விரும்பதகாத சம்பவங்கள், சில நேரங்களில் அவர்களுக்கே எமனாக மாறி வருகிறது. அப்படியொரு சம்பவம், அரக்கோணம் அருகே நிகழ்ந்துள்ளது. குடிபோதையில் தகராறு செய்த கணவரை, மனைவியே கொலை செய்த கொடூரம் அரங்கேறியுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அடுத்த உரியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சீராளன். இவரது மனைவி ஷோபனா. இவர்களுக்கு திருமணம் ஆகி 12 ஆண்டுகள் ஆன நிலையில், 10 வயதில் மகளும், 8 வயதில் மகனும் உள்ளனர். இரு குழந்தைகளும், அருகேயுள்ள அரசுப் பள்ளியில் படித்து வருகின்றனர்.
கண்ணை மறைத்த கள்ளக் காதல்.. ஒரே ஊசியில் கணவனை காலி செய்த 'ஒத்தரோசா!'
மதுவுக்கு அடிமை
உரியூர் கிராமத்தில், தனது மனைவி ஷோபனா பெயரில் ரேடியோ சவுண்ட் சர்வீஸ் கடையை சீராளன் நடத்தி வந்துள்ளார். மதுபோதைக்கு அடிமையான சீராளன், குடித்து விட்டு, வீட்டுக்கு வந்து, மனைவியுடன் சண்டையிடுவதை வாடிக்கையாக கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதனால், கணவன் - மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. மேலும், சீராளனுக்கும், அதே பகுதியில் உள்ள மற்றொரு பெண்ணுக்கும் தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் சீராளன் தனது வீட்டிக்கு சரியாக வராததோடு, குடும்பச் செலவுக்கும் பணம் கொடுக்காமல் இருந்து வந்துள்ளார். குடித்து விட்டு வீட்டுக்கு வந்தால், மனைவி ஷோபனாவிடம், சீராளன் கடுமையாக சண்டையிட்டும் வந்துள்ளார்.
நள்ளிரவில் தகராறு
இந்நிலையில், நள்ளிரவில் போதையில் வந்த சீராளனுக்கும், அவரது மனைவிக்கும் இடையே வழக்கம்போல் மீண்டும் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. சண்டையின்போது, மனைவி ஷோபனா, சீராளனின் மற்றொரு பெண்ணின் தொடர்பு குறித்து கேட்டதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த சீராளன், மனைவி ஷோபனாவை கடுமையாக தாக்கியுள்ளார்.
கணவர் கொலை
பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு என்பதுபோல, மனைவி ஷோபனா இந்த கொடுமைகளை தாங்கிக் கொண்டிருந்துள்ளார். ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த மனைவி ஷோபனா, கணவர் என்றும் பாராமல், சீராளனின் தலையில் கல்லைப் போட்டு, கடப்பாரையால் கடுமையாக தாக்கியுள்ளார். இதில் நிலை தடுமாறிய சீராளன், படுகாயமடைந்து, ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலயே துடித்துடித்து உயிரிழந்தார்.
காவல் நிலையத்தில் சரண்
குடிபோதையில் தன்னை கடுமையாக தாக்கிய கணவரை, தாலி கட்டிய கணவர் என்றும் பாராமல், ஆத்திரத்தில் கடப்பாரையால் அடித்துக் கொலை செய்த மனைவி ஷோபனா, அதிகாலையில் திருவள்ளூர் மாவட்டம் மப்பேடு காவல் நிலையத்தில் சரண் அடைந்தார். குடித்து விட்டு தகராறு செய்த கணவரை அடித்துக் கொன்றதாகவும் அவர் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.
போலீசார் நடவடிக்கை
இதனையடுத்து, மப்பேடு போலீசார் அளித்த தகவலின்பேரில், தக்கோலம் போலீசார், சம்பவம் நிகழ்ந்த உரியூர் கிராமத்திற்கு சென்றனர். அங்கு உயிரிழந்து கிடந்த சீராளனின் உடலைக் கைப்பற்றி, அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, கணவரை கொலை செய்த மனைவி ஷோபனாவை, போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குழந்தைகளின் எதிர்காலம்
மதுபோதையில் தகராறு செய்த கணவரை கொலை செய்து விட்டு, மனைவி காவல் நிலையத்தில் சரணடைந்த நிலையில், தந்தையும், தாயுமின்றி பரிதவிக்கும் அவர்களின் பிஞ்சு குழந்தைகளின் எதிர்காலம் தற்போது கேள்விகுறியாகியுள்ளது. குடிபோதையில் தகராறு செய்த கணவனை, கட்டிய மனைவியே அடித்துக் கொலை செய்துவிட்டு, காவல் நிலையத்தில் சரணடைந்த சம்பவம், அரக்கோணம் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.