குரங்குகளின் அட்டகாசத்தால் திருத்தணியில் அதிகரிக்கும் மரணங்கள்.. இன்று மேலும் ஒருவர் பலி!
குரங்குகளின் அட்டகாசத்தால் திருத்தணியில் இன்று மேலும் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
திருத்தணி: குரங்குகளின் அட்டகாசத்தால் திருத்தணியில் நேற்று பெண் ஒருவர் உயிரிழந்த நிலையில் இன்று முருகேசன் என்ற முதியவர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் உள்ள மலையில் திருத்தணி முருகன் கோவில் உள்ளது. இந்தக் கோவில் முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றாகும்.
ஆண்டின் 365 நாட்களையும் குறிக்கும்படியாக 365 படிகளைக் கொண்டது இந்த மலைக்கோவில். இந்த கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
பெங்களூரைச் சேர்ந்த பெண்
இந்நிலையில் கடந்த சில நாட்களாக இங்கு குரங்குகளின் தொல்லை அதிகமாகியுள்ளது. நேற்று பெங்களூருவை சேர்ந்த கணேஷ் என்பவர் தனது மனைவி நளினி மற்றும் உறவினர்களுடன் திருத்தணி முருகன் கோவிலுக்கு வந்தார்.
பூஜை பொருட்கள்
மலைக்கோவில் தேர் வீதியில் பூஜைக்கு தேவையான பழம், தேங்காய் போன்றவற்றை வாங்கி கொண்டு கோவிலுக்குள் சென்றனர். பூஜை பொருட்களை நளினி வைத்திருந்தார்.
பழங்களுக்காக பாய்ந்த குரங்குகள்
அப்போது திருத்தணி முருகன் கோவிலில் சுற்றி திரிந்த குரங்குகள் நளினி வைத்திருந்த பழங்களை பறிக்க அவர் மீது பாய்ந்து தாக்கின. அவரது உறவினர்களையும் தாக்கியது.
மயங்கி விழுந்த பெண்
குரங்குகள் தாக்கியதில் அதிர்ச்சி அடைந்த நளினி மயங்கி விழுந்தார். இதையடுத்து அங்கு இருந்தவர்கள் நளினியை மீட்டு சிகிச்சைக்காக திருத்தணி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
குரங்குகளால் பெண் மரணம்
அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். குரங்குகள் தாக்கியதில் பயந்துபோன அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக தெரிகிறது.
அரக்கோணத்தை சேர்ந்தவர்
இந்நிலையில் குரங்குகள் விரட்டியதால் கீழே விழுந்து இன்று ஒரு முதியவர் பலியாகியுள்ளார். அரக்கோணத்தைச் சேர்ந்தவர் 53 வயதான முருகேசன் முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு வெளியே வந்துள்ளார்.
தடுமாறி விழுந்த முதியவர்
அப்போது அங்கிருந்த குரங்குகூட்டம் அவரை விரட்டி கையில் இருந்த பூஜை பொருட்களை பறித்தது. இதில் தடுமாறி விழுந்த முதியவர் முருகேசனுக்கு தலையில் காயமடைந்தது.
முதியவர் உயிரிழப்பு
இதைத்தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். குரங்குகளின் அட்டகாசத்தால் இன்றும் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கோரிக்கை
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பொதுமக்களின் உயிருக்கு அச்சுறுத்தலாக உள்ள குரங்குகளை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.