திருக்கோவிலூர் பஸ்ஸில் தொழிலாளி மரணம்..சடலத்துடன் நண்பரையும் இறக்கிவிட்ட "இரக்கமற்ற" கன்டக்டர்...
பெங்களூரிலிருந்து திருக்கோவிலூர் செல்லும் பேருந்தில் தொழிலாளி மரணமடைந்ததால் சடலத்துடன் சேர்த்து நண்பரையும் அந்த பஸ் கன்டக்டர் இறக்கிவிட்டார்.
திருக்கோவிலூர்: பெங்களூரிலிருந்து திருக்கோவிலூர் வந்த போது பேருந்திலேயே இறந்த தொழிலாளியின் சடலத்துடன் அவரது நண்பரையும் பஸ் கன்டக்டர் நடு வழியில் இறக்கிவிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஊதிய உயர்வு கோரி போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் ஆட்டோ, வேன் ஓட்டுநர்கள், அண்ணா தொழிற்சங்க டிரைவர்களை கொண்டு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் பெங்களூரிலிருந்து திருக்கோவிலூருக்கு இரு தொழிலாளிகள் பேருந்தில் வந்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென அந்த இருவரில் ஒருவர் இறந்துவிட்டார்.
இதையறிந்த நடத்துநர் சடலத்தை எடுத்துக் கொண்டு செல்லுமாறு நண்பரிடம் கூறினார். ஆனால் அவரோ திருக்கோவிலூரில் இறக்கிவிடுமாறி கூறியும் அதை பேருந்து நடத்துநர் கேட்க வில்லை.
பின்னர் ஈவு இரக்கமின்றி பேருந்திலிருந்து நண்பரையும் சடலத்துடன் நடுவழியில் இறக்கிவிட்டு விட்டார். இதனால் நடுவழியில் நின்று கொண்டு சொந்த ஊர் செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருகிறார் அந்த நண்பர்.
இறக்கிவிட்டது மட்டுமல்லாமல் பேருந்தில் பயணம் செல்ல இருவர் எடுத்த டிக்கெட்டுகளையும் அந்த நடத்துநர் பறித்து சென்றதாக நண்பர் புகார் கூறினார்.