தாய் எனும் கோவில்.. வயலுக்கு ஓடி வந்த மகன்.. காலில் விழுந்த உணர்ச்சி காட்சி!
தாயின் காலை போலீஸ் மகன் தொட்டு வணங்கி ஆசி வாங்குகிறார்.
Recommended Video
சென்னை: ஒரே ஒரு புகைப்படம் இன்று நாட்டையே திரும்பி பார்க்க வைத்து கண்களில் நுழைந்து... இதயத்தில் ஒட்டிக் கொண்டுள்ளது.
வேர் இல்லாத மரம்போல் என்னை நீ பூமியில் நட்டாய்.. உலகத்தின் பந்தங்கள் எல்லாம் நீ சொல்லி தந்தாயே.. பிறப்புக்கும் இறப்புக்கும் இடையில் வழி நடத்தி சென்றாயே.. - சினேகனின் இந்த தாய்மை கலந்த வரிகளில்தான் எத்தனை எத்தனை உயிர்ப்புள்ள வார்த்தைகள். இந்த வார்த்தைகளில் உள்ள உயிரோட்டத்தை, உண்மையை, உருக்கத்தை உதிர்த்துள்ளது இந்த கர்நாடக போலீஸ்காரரின் புகைப்படம்.
[யு நோ ஒன் திங்... இந்த நியூ டிரெஸ் தைக்க லீலிக்கு 3 மணி நேரம்தான் ஆச்சாம்!!]
போராட்டமே வாழ்க்கை
கர்நாடக மாநிலத்தை சேர்ந்த ஒரு பெண்மணி.. கணவனை இழந்தவர்... வசதி என்பதை அறியாதவர்... வறுமையையே சுவாசித்தவர்... போராட்டமே வாழ்க்கை என்று வாழ்ந்த அந்த ஏழைப்பெண் தன் மகனை பாடுபட்டு வளர்த்தார்.. படிக்க வைத்தார்.
கொளுத்தும் வெயில்
தன்னையே உருக்கி கொண்ட தாயின் பாடுகளுக்கு பலன் நாட்கள் கடந்து கனிந்தது. மகன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டு விட்டார் என்பதுதான் அது. அதற்கான நிகழ்வும் நடைபெற்றுவிட்டது. ஆனால் மகனின் தேர்வை கண்குளிர பார்க்க இந்த தாயால் முடியவில்லை. காரணம், அப்போதும் கொளுத்தும் வயலில் வேலையில் இருந்ததுதான்!
பாத தொட்டு ஆசி
போஸ்டிங் ஆர்டரை கையில் வைத்துக் கொண்டு வயல்வெளியில் தாயை தேடி ஓடி வருகிறார் மகன். வியர்வை துளியில் நனைந்து வேலை பார்த்து கொண்டிருந்த தாயின் காலில் விழுந்து அவரது பாதம் தொட்டு ஆசி வாங்கினார் மகன். இந்த புகைப்படம்தான் தற்போது வைரலாகி வருகிறது.
|
சிங்கள் மதர்கள்
இந்த புகைப்படத்தை கர்நாடக மாநில ஆயுதப்படை கூடுதல் டிஜிபி பாஸ்கர ராவ் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படத்தில் சமூகத்தில் இன்னும் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்'' என்று ஒரு ட்விட்டும் பதிவிடப்பட்டுள்ளது. இதையடுத்து இந்த புகைப்படம் ஏராளமானோரின் மனதை வெகுவாகவே பாதித்துள்ளது. தாய்-மகன் பாசத்தை பாராட்டி பல்வேறு ட்வீட்கள் போடப்பட்டு வருகின்றன. ''சிங்கிள் மதர்களின் கஷ்டத்தையும் அவர்களின் வெற்றியையும், ஒரே நேரத்தில் உணர்த்திய புகைப்படம்'' என்று ட்வீட் போடப்பட்டுள்ளது.
|
யாராலும் நிரப்ப முடியாது
அதேபோல, ''ஒரு புகைப்படம் ஆயிரம் வார்த்தைகளுக்கு சமம் என்பார்கள், இந்த புகைப்படம், பில்லியன் வார்த்தைகளுக்கு சமம்'' என்று இன்னொரு ட்வீட் போடப்பட்டுள்ளது. "உணர்வை பிரதிபலிக்கிறது இந்த படம், தாயின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது" என்று மற்றொரு ட்வீட்டும் உள்ளது. இந்த படம் சமூகவலைதளங்களில் வேகமாக சுழன்று கொண்டே வருகிறது.
ஒட்டுமொத்த வாழ்வியல்
ஒரு தாயின் ஒட்டுமொத்த வாழ்வியல் துன்பங்கள் இந்த புகைப்படத்தில் பளிச்சிட்டு நிற்கிறது. மெழுகாய் உருக்கி கொண்ட அந்த தாயை இனி இந்த தனயன் தாங்கி பிடிப்பான் என்ற நம்பிக்கையும் நமக்கு சேர்ந்தே எழுகிறது.