தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டின் தாக்கம்... புதிய ரக துப்பாக்கியை வடிவமைத்த இளைஞர்
Recommended Video
கும்பகோணம்: கலவரத்தில் ஈடுபடுவோரை விரட்டியடிப்பதற்காக, உயிருக்கு ஆபத்தை விளைவிக்காத, புதிய ரக துப்பாக்கியைத் கும்பகோணத்தைச் சேர்ந்த இளைஞர் தயாரித்துள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தைச் சேர்ந்த சரவணன், ரஷ்யாவில் உள்ள உக்ரைன் பல்கலைக்கழகத்தில் என்ஜினியரிங் படித்துள்ளார்.
படித்த பின் வெளிநாட்டு பணிகளுக்குச் செல்ல விருப்பம் இல்லாமல், அறிவியல் பூர்வமான, பயனுள்ள கருவிகளை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
உயிரிழப்பு இருக்காது
அதில் ஒன்றாக இவர் கண்டுபிடித்திருப்பது உயிரிழப்பின்றி கலவரத்தை கட்டுப்படுத்தும் துப்பாக்கி.
உருளைக் கிழங்கு, களிமண் உருண்டை உள்ளிட்டவற்றை பயன்படுத்தி சுட்டால் கலவரக்காரர்களுக்கு காயம் ஏற்படாமல் பெரும் வலியை மட்டும் ஏற்படுத்தும் என்கிறார் சரவணன்.
தூத்துக்குடி சம்பவத்தின் தாக்கம்
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தின் தாக்கத்தில் இந்த துப்பாக்கியை வடிவமைத்ததாகக் கூறும் சரவணன், மேலும் பல கண்டுபிடிப்புகளை உருவாக்கி வருவதாகவும் தெரிவித்தார். சிறு வயது முதலே ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வந்ததால், மிகுந்த பொருட்செலவில் அவரை ரஷ்யாவில் படிக்க வைத்ததாக சரவணனின் தந்தை தெரிவித்துள்ளார்.
தெர்மாகோல் முயற்சி
வைகை அணை நீர் ஆவியாகாமல் தடுக்க தெர்மாகோல் வைத்து மூட முயற்சி நடைபெற்றதை பலர் கேலி, கிண்டல் செய்ததாகவும் ஆனால் அதனை வெற்றிகரமாக நிறைவேற்றிக் காட்ட தன்னிடம் திட்டம் உள்ளதாகவும் சரவணன் கூறியுள்ளார். மேலும், 25 கண்டுபிடிப்புகளுக்கு தன்னிடம் ஃபார்முலா உள்ளதாகவும், நிதிவசதி இல்லாததால் அவற்றை செயல்படுத்த முடியவில்லை என்றும் வேதனை தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டில் படிப்பு
தான் வடிவமைத்த துப்பாக்கி, ஆயுத வகையில் வருவதால், காவல்துறை மூலமாக அரசிடம் சமர்ப்பிக்க உள்ளதாக சரவணன் கூறினார். வெளிநாட்டில் படித்து அங்கே வேலையை தேடிக் கொள்ளும் பலரின் மத்தியில், தான் படித்த படிப்புக்கு வெளிநாட்டில் வேலை கிடைத்தும், தாய்நாட்டிற்காக பணியாற்ற வேண்டும் என்ற நோக்கில் பல்வேறு கண்டுபிடிப்புகளை சரவணன் தொடர்ந்து செய்துவருகிறார்.