பெரியகுளம் அருகே சோகம்.. திருமண நாளில் அணையில் மூழ்கி இளைஞர் பலி
பெரியகுளம் அருகே சோகம்.. இளைஞர் அணையில் மூழ்கி பரிதாப பலியானார்.
பெரியகுளம்: பெரியகுளம் அருகே தனது முதலாவது திருமண நாளை கொண்டாட இருந்த இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினர் மற்றும் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
எண்டப்புளி புதுப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ், 30. இவர் சென்னையில் ஒரு தனியார் நிறுவனத்தில் பாதுகாப்பு அதிகாரியாக வேலை பார்த்து வந்த இவருக்கு கடந்த ஓராண்டுக்கு முன்புதான் திருமணம் நடந்தது.
கடந்த வாரம் இவரது மனைவிக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்ற காரணத்தினால், அதில் பங்கேற்க சுரேஷ் தனது கிராமத்திற்கு வந்துள்ளார். அத்துடன் இன்று அவரது முதலாவது திருமண நாளையும் கொண்டாட எண்ணியிருந்தார்.
இந்நிலையில் நேற்று உறவினர் வீட்டுக்கு சென்ற சுரேஷ் அருகிலிருந்த வைகை அணை நீர்தேக்கத்துக்கு குளிக்க சென்றார். பிறகுதான் சுரேஷூக்கு தெரியவந்துள்ளது ஆழமான பகுதியில் இறங்கி விட்டோம் என்று.
இதனால் இறங்கிய சிறிது நேரத்திலேயே நீரில் மூழ்க ஆரம்பித்தார். தன்னை காப்பாற்றுமாறு சத்தம் போட்டதும், அருகிலிருந்தவர்கள் அவரை காப்பாற்ற ஓடி வந்தனர். ஆனால் எவ்வளவு போராடியும் சுரேஷை அவர்களால் காப்பாற்ற முடியவில்லை.
இதனால் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. விரைந்து வந்த வீரர்கள் 3 மணி நேரம் போராடி சுரேஷ் உடலை மீட்டனர். இந்த சம்பவம் குறித்து வைகை அணை போலீசார் விசாரணையை துவங்கியுள்ளனர்.
இன்று தனது முதலாவது திருமண நாளை கொண்டாட சுரேஷ் உட்பட குடும்பத்தார் அனைவருமே ஆவலாகவும் தயாராகவும் இருந்தனர். ஆனால் சுரேஷ் அணையில் மூழ்கி பலியானது குடும்பத்தார் உட்பட அந்த பகுதி மக்களையே நிலைகுலைய வைத்துள்ளது.