சென்னையில் வெளிநாட்டு பெண் மர்மமான முறையில் உயிரிழப்பு.. தப்பியோட முயன்ற காதலன் கைது!
சென்னையில் பின்லாந்து நாட்டைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
சென்னை: திருவல்லிக்கேணியில் பின்லாந்து நாட்டைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் தனது அறையில் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்திற்கு பல்வேறு நாடுகளில் இருந்தும் நாள்தோறும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். பெரும்பாலான வெளிநாட்டினர் தமிழகத்தில் உள்ள கோவில்களை சுற்றிப்பார்க்கவும் படிப்புக்காகவும் சென்னைக்கு வருகின்றனர்.
சென்னையில் பன்னாட்டு விமான நிலையம் உள்ளதால் தமிழகத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகள் பெரும்பாலும் சென்னைக்கே வருகின்றனர்.
இந்தியா வந்த காதலர்கள்
இந்நிலையில் பின்லாந்து நாட்டை சேர்ந்த பாலோம்கி என்ற இளைஞரும் ஹீலா என்ற 23 வயது இளம்பெண்ணும் கடந்த வாரம் இந்தியாவுக்கு சுற்றுலா வந்தனர்.
திருவல்லிக்கேணியில் ஸ்டே
காதலர்களான இவர்கள் டெல்லியை சுற்றிப்பார்த்த நிலையில் நேற்று சென்னைக்கு வந்தனர். சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள தங்கும் விடுதியில் இவர்கள் தங்கியிருந்தனர்.
தப்ப முயன்ற காதலன்
இந்நிலையில் இன்று காலை காதலன் பாலோம்கி விடுதியில் இருந்து தனியாக தப்ப முயன்றார். இதனை கவனித்த விடுதி ஊழியர்கள் அவரை பிடித்த கையோடு அறைக்கு சென்று பார்த்தனர்.
காதலி உயிரிழப்பு
அப்போது அறையில் அவரது காதலி ஹீலா இறந்த நிலையில் கிடந்தது தெரியவந்தது. இதையடுத்து விடுதி நிர்வாகத்தினர் காவல்துறைக்கு தகவல் தெரியிவித்தனர்.
அதிகமாக போதைப்பொருள்
சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் ஹீலா அளவுக்கு அதிகமாக போதைப்பொருள் உட்கொண்டது தெரியவந்தது. அவரது அருகிலேயும் போதை பொருள் கிடந்ததாக கூறப்படுகிறது.
காதலன் கைது
இதையடுத்து ஹீலாவின் உடலை கைப்பற்றிய போலீசார் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் தப்பியோட முயன்ற காதலன் பாலோம்கியையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
எப்படி கிடைத்தது?
மேலும் வெளிநாட்டு காதல் ஜோடிகளுக்கு போதை பொருள் கிடைத்தது எப்படி என்றும் போலீசார் விசாரித்து வருகின்றனர். சென்னையில் வெளிநாட்டு இளம்பெண் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.