மணப்பெண் கோலத்தில் இளம் பெண் போராட்டம் - நெல்லையில் பரபரப்பு
நெல்லை அருகே நிச்சயம் செய்யப்பட்ட இளைஞருடன் திருமணம் செய்து வைக்கக்கோரி இளம் பெண் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
நெல்லை: நெல்லை அருகே நிச்சயம் செய்யப்பட்டவருடன் திருமணம் செய்து வைக்கக்கோரி இளம்பெண் போராட்டத்தில் ஈடுபட்டார். மணக்கோலத்தில் இளம்பெண் போராட்டத்தில் ஏற்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
நெல்லை மாவட்டம் சுரண்டை வீரசிகாமணியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகள் கீதா, எம்.எஸ்.சி. பட்டதாரியான இவருக்கும் சேர்ந்த மரம் அருகே உள்ள தன்னூத்தை சேர்ந்த தெய்வேந்திரன் மகன் குருசாமி என்பவருக்கும் திருமணம் செய்ய கடந்த 3 மாதங்களுக்கு முன்பு உறுதி செய்யபபட்டுள்ளது.
டிப்ளமோ முடிந்துள்ள குருசாமி திருப்பூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். கீதாவின் வீட்டார் தரப்பில் வரதட்சணையாக ரூ.2 லட்சம் ரொக்கம் மற்றும் 40 பவுன் நகை தருவதாக பேசப்பட்டது. திருமணம் தை மாதம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் தை மாதம் பிறந்தும் திருமணம் நடத்த தேதி தராமல் மாப்பிள்ளை வீட்டார் தரப்பில் இழுத்தடிக்கப்பட்டு வந்ததுடன், திருமணத்துக்கும் மறுப்பு தெரிவித்து வந்துள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த புதுப்பெண் கீதா நேற்று முன்தினம் பட்டுசேலை, நகைகள் அணிந்து தன்னூத்து கிராமத்தில் உள்ள மணமகன் வீட்டுக்கு வந்தார்.
அப்போது அங்கிருந்த மணமகன் வீட்டார் அதிர்ச்சியடைந்து அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்ததும் சேர்ந்தமரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கீதாவிடமும் அவரது பெற்றோர் மற்றும் மணமகன் வீட்டாரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இருப்பினும் கீதா மணமகன் வீட்டு முன்பு போராட்டத்தில் ஈடுபட்டார்.
தொடர்ந்து இன்று 3-வது நாளாக போராட்டத்தை தொடர்ந்தார். இதற்கிடையே நேற்று நள்ளிரவில் குருசாமியின் பெற்றோர் வீட்டை விட்டு வெளியேறிவிட்டனர்.
எனினும் கீதா குருசாமியின் வீட்டில் தனது பெற்றோர் மற்றும் உறவினர்களுடன் அமர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார். இது குறித்து கீதா கூறுகையில், என்னை ஏமாற்ற நினைக்கும் குருசாமியுடன் திருமணம் செய்து வைக்கும் வரை இங்கிருந்து செல்ல மாட்டேன். எனக்கு நியாயம் கிடைக்கும் வரை போராட்டத்தை தொடருவேன் என கூறினார். இளம்பெண்ணின் தொடர் போராட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.