விவசாயத்தை பாதுகாக்க வலியுறுத்தி சைக்கிளில் பயணிக்கும் இளைஞர்.. டெல்லி டூ நேபாள் வரை சென்று சாதனை!
விழுப்புரத்தை சேர்ந்த செந்தில்குமார் என்ற இளைஞர் ஒருவர் விவசாயத்தை பாதுகாக்க வலியுறுத்தி சைக்கிளில் பயணம் செய்து வருகிறார்.
சென்னை: விழுப்புரத்தை சேர்ந்த செந்தில்குமார் என்ற இளைஞர் ஒருவர் விவசாயத்தை பாதுகாக்க வலியுறுத்தி சைக்கிளில் பயணம் செய்து வருகிறார். தற்போது டெல்லியில் இருந்து நேபாள் வரை சைக்கிளில் சென்று அவர் தனது கோரிக்கையை திடமாக வலியுறுத்தியுள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் ஆனத்தூரைச் சேர்ந்தவர் செந்தில்குமார். 34 வயதான இவர் விவசாயத்தை பாதுகாக்க வலியுறுத்தி நூதன முறையை கையில் எடுத்துள்ளார்.
சிறுவயது முதலே சைக்கிளிங்கில் ஆர்வம் கொண்ட அவர், அதனை முக்கியமான ஒரு தேவைக்காக பயன்படுத்தியுள்ளார். அதாவது விவசாயத்தை பாதுகாக்கக்கோரி டெல்லியில் இருந்து நேபாளம் வரை 1400 கிலோ மீட்டர் தூரம் அவர் சைக்கிளில் பயணம் செய்துள்ளார். இதுதொடர்பாக நமது ஒன்இந்தியா தமிழ்தளத்துடன் அவர் பகிர்ந்துகொண்ட தகவல்கள்..
சைக்கிள் மீது ஆசை
சிறுவயதில் இருந்தே நான் மிதிவண்டியை பயன்படுத்தி வருகிறேன். எனது குடும்பத்தில் அண்ணன், தம்பிகள் என நாங்கள் மூன்று பேர், நான் தான் இளையவன். எங்கள் வீட்டில் இருப்பதோ ஒரு மிதிவண்டி மட்டுமே, அண்ணன், தம்பிகளுக்குள் பயங்கர சண்டைக் காட்சி நடக்கும் காரணம் யார் முதலில் சைக்கிள் எடுத்து ஒட்டுவது என்று. சைக்கிள் கிடைக்கவில்லை என்றால் அம்மா மிட்டாய் வாங்கி சாப்பிட தரும் காசை வைத்து வாடகை சைக்கிள் எடுத்து ஒட்டிய காலம் அது. மணிக்கு 25 பைசா, 50 பைசா மட்டுமே. பிறகு அதுவே சைக்கிள் மீது தீராத காதலாக மாறியது. நாட்களும் கழிந்தன பள்ளிப்பருவமும் கழிந்தது, பிறகு கல்லூரி காலங்களில் கூட தனக்கு பிடித்த மாதிரியான சைக்கிள் பயணத்தையே தொடர்ந்தேன். தன்னுடன் படிக்கும் சக மாணவர்கள் இருசக்கர வாகனத்தில் வளம் வருவார்கள், ஆனால் நான் எனது மிதிவண்டியில் பவனி வருவேன்.
முதல் சம்பளத்தில் சைக்கிள்
காலங்கள் மாறின காட்சிகளும் மாறியது. படித்து முடித்த வேளைக்கு செல்லும் போது தனக்கு சொந்தமாக ஒரு சைக்கிள் வாங்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன் அதைப்போலவே நண்பர் ஒருவர் பயன்படுத்தி வந்த சைக்கிளை முதல் மாதம் சம்பளத்தில் இருந்து வாங்கினேன். அதுவே நான் எனது முதல் உழைப்பில் வாங்கிய தங்கம், வைடூரியம் ஆகும். பிறகு சென்னைக்கு வேலை தேடி வரவேண்டிய சூழ்நிலை அப்போது நான் பயன்படுத்தி வந்த சைக்கிளை ஒரு பார்சல் சர்வீஸ் மூலமாக சென்னைக்கு கொண்டு வந்து பயன்படுத்த துவங்கினேன். சென்னையில் உள்ள WCCG மிதிவண்டி குழுவில் இனைந்து தனது பயணத்தை தொடர்ந்தேன். சிறுவயதில் இருந்த ஆர்வத்தை விட சென்னை மக்களுடன் கைகோர்க்கும் போது தான் ஆர்வமும், உத்வேகமும், அதிகமாக இருந்தது.
ஆரியாவுடன் சைக்கிள் பயணம்
பிறகு நடிகர் ஆரியா கிழக்கு கடற்கரைச் சாலையில் சைக்கிள் பயணம் மேற்கொள்வார். அவருடன் இணைந்து பல பயணங்கள் செய்திருக்கிறேன். அவர் கொடுக்கும் ஊக்கமும், உத்வேகமும் அளவற்றவை. இப்படி காலங்கள் செல்லும் போதுதான் சைலேஷ் என்னும் நண்பர் எனக்கு அறிமுகமானார் அப்போது அவர்தான் என்னை அடுத்த நிலைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று மிகவும் ஆவலாய் இருந்தார். தன்னுடைய சைக்கிள் மீது நான் வைத்திருக்கும் அதீத காதலை கண்டு எனக்கு இரண்டரை இலட்சம் ரூபாயில் சைக்கிளை தனக்கு பரிசாக அளித்தார். 2016ம் ஆண்டு தனது வாழ்வையே மாற்றிப்போட்டது நண்பரின் சைக்கிள் பரிசு உதவியால். பல போட்டியாளர்கள் நிற்கும் அதே வரிசையில் நானும் நின்றேன். பிறகு மெல்ல மெல்ல Brevets de Randonneurs Mondiaux (BRM)
Organizing Club: Madras Randonneurs
என்று அழைக்கப்படுகின்ற நிகழ்ச்சியில் பல முறை கலந்து கொண்டு பல பயணங்கள் செய்து இருக்கிறேன்.
வித்தியாசமான விளையாட்டு
இந்த பயணம் சற்று வித்தியாசமான ஒரு விளையாட்டு. முதலில் 200, 300, 400, 600, 1000, 1200, என படிப்படியாக முன்னேறி செல்ல வேண்டும். குறிப்பாக இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் போது யாருடைய உதவியும் இல்லாமல் பயணம் செய்ய வேண்டும். தனது மிதிவண்டியில் எந்த ஒரு பிரச்சினை என்றாலும் அதையும் நாமே சரி செய்து கொள்ள வேண்டும். குறிப்பாக நமது சைக்கிள் டயரில் பஞ்சர் ஏற்பட்டால் கூட அதையும் நாம் தான் சரி செய்து கொள்ள வேண்டும். இதன் மூலம் நான் கற்றுக் கொண்ட வாழ்க்கை பாடம் ஏராளம் ஏராளம். குறிப்பாக சுய முன்னேற்றத்தை நான் நன்கு கற்றுக்கொண்டேன். இந்த நிகழ்ச்சியில் அதுவும் குறிப்பிட்ட நேரத்திற்கு குறிப்பிட்ட இடத்திற்கு விரைந்து செல்ல வேண்டும். 1000 கி.மீட்டர் பயணம் என்றால் 90 மணி நேரம் நமக்கு ஒதுக்கப்படும் அதில் 9 கன்ரோல் பாய்ன்ட் வைத்து நம்மை கண்காணிப்பார்கள் அதுமட்டுமல்ல சீக்ரெட் கன்ரோல் பாய்ன்ட் என்று ஒன்று உள்ளது.
சமூகத்தின் மீது அக்கறை
நமக்கு தெரியாமலே நம்மை கண்காணிப்பார்கள் அப்படி நான் கண்ரோல் பாய்ன்டுக்கு கடந்து செல்ல வில்லை என்றால் நான் இந்த நிகழ்ச்சியில் தொடர்ந்து பயணம் செய்யும் வாய்ப்பை இழந்து விட்டேன் என்று பொருள். இப்படி பயணங்கள் சென்று கொண்டு இருக்கும் போதுதான் இனி விருதுகள், சான்றிதழ்கள், வாங்கியது போதும் என படிப்படியாக இது போன்ற சைக்கிள் பயணத்தை ஒதுக்கி வைத்து விட்டு சமூக அக்கறையுடன் பயணம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் எனக்கு தோன்றியது. இன்று தனி ஒருவனாக நான் விதைக்கும் இந்த விதை நாளை தோப்பாக மாறலாம். அதன் முதல் கட்டமாக அழிந்து வருகின்ற விவசாயத்தையும், குடிநீரையும் காப்பற்றவேண்டும் என்ற சிந்தனையுடன், விவசாயம் காப்போம், தண்ணீரை சேமிப்போம் என்ற தலைப்பில் தமிழகம் முழுவதும் தனி ஒரு மனிதனாக 32 மாவட்டங்களையும் 9 நாள் தொடர் பயணமாக தனது சைக்கிள் வளம் வர ஆரம்பித்தேன். வழிநெடுகிலும் நான் சந்தித்த விவசாய பெருங்குடி மக்கள் அனைவரும் உற்சாக வரவேற்பு அளித்தனர். பிறகு தனது முகநூல் பக்கத்தில் இருக்கும் அன்பர்களும், நண்பர்களும்,உறவினர்களும் , தனது குடும்பத்தினரும், அளித்த ஊக்கமும், உத்வேகமும், எனக்கு பேருதவியாக இருந்தது.
விவசாயத்தை பாதுகாக்க வேண்டும்
இந்த பயணத்தில் நாளொன்றுக்கு 230 கி.மீட்டர் தூரம் பயணம் செய்ய வேண்டும். அப்படி பயணம் செய்தால்தான் 32 மாவட்டங்களையும் நான் சுற்றி வர முடியும். காலை 6 மணிக்கு தொடங்கும் பயணம் இரவு 10 மணிக்கு தான் முடிவடையும். நடுவில் மழை, கடுமையான வெயில், இவற்றையெல்லாம் தாண்டி தான் இந்த பயணம் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பயணத்தை நாட்டின் முதுகெலும்பு என்று அழைக்கப்படும் நமது விவசாயிகளுக்கு சமர்ப்பணம் செய்கிறேன். எனது அடுத்தடுத்த பயணங்களும் இதை போன்ற சமூக சிந்தனையுடன் தொடரும். எனது சிந்தனை முழுவதும் முடிந்த வரை கணிசமான நண்பர்களையாவது சைக்கிள் ஓட்ட வைக்க வேண்டும் என்பது தான் எனது முழு முயற்சியாக இருக்கின்றது. புகையில்லா மாநிலமாகவும், பசுமையான தமிழகமாகவும் இருக்க வேண்டும் விவசாயம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே எனது எண்ணம். என தெரிவித்துள்ளார் செந்தில்குமார். இதனை வலியுறுத்தி தற்போது டெல்லியில் இருந்து நேபாள் வரை 1400 கிலோ மீட்டர் சைக்கிளில் பயணம் செய்துள்ள செந்தில்குமாருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.