தொடரும் உயிரிழப்புகள்.. தூத்துக்குடி அருகே கந்துவட்டி தொல்லையால் இளைஞர் தற்கொலை!
கந்துவட்டி கொடுமையால் தூத்துக்குடி அருகே இளைஞர் ஒருவர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி: கந்துவட்டி கொடுமையால் தூத்துக்குடி அருகே இளைஞர் ஒருவர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கந்துவட்டி தொல்லையால் இசக்கி முத்து என்பவர் கடந்த மாதம் தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளித்து உயிரிழந்தார், இதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் நடக்கும் கந்து வட்டி கொடுமைகள் வெளிச்சத்துக்கு வர தொடங்கியுள்ளன.
அண்மையில் நடிகர் சசிகுமாரின் மைத்துனர் அசோக்குமார் சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் கொடுத்த கடன் நெருக்கடியால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதையடுத்து கந்துவட்டிக்கு எதிரான குரல் வலுத்துள்ளது.
இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் கந்துவட்டிக்காரரின் மிரட்டலால் இளைஞர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். லாயல் காலனியில் உள்ள கிணற்றில் குதித்து மாரீஸ்வரன் என்ற இளைஞர் தற்கொலை செய்துகொண்டார்.
உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் மாரீஸ்வரனுக்கு கடன் கொடுத்தவர் யார் மிரட்டல் விடுத்தவர் யார் என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடன் தொல்லையால் இளைஞர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.