மதுரை அருகே காதலுக்கு உதவிய வாலிபர் வெட்டிக்கொலை - வீடியோ
மதுரை: மதுரை அருகே டூவீலரில் வந்த 3 வாலிபர்களை மற்றொரு டூவீலரில் வந்த கும்பல் சரமாரியாக வெட்டியதில் வாலிபர் ஒருவர் பலியானார். காதல் தகராறில் இக்கொலை நடந்தது தெரியவந்துள்ளது. மதுரை அருகே சக்கிமங்கலத்தைச் சேர்ந்த ராஜன் மகன் முத்துமாணிக்கம் ,25. தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இவர், தனது நண்பர்கள் சவுந்தரபாண்டி, முனீஸ்வரன் ஆகியோருடன் சக்கிமங்கலத்திலிருந்து வண்டியூர் தீர்த்தக்காடு நோக்கி இருசக்கர வாகனத்தில் நேற்று மாலை வந்து கொண்டிருந்தனர்.
அப்போது, இரு சக்கர வாகனத்தில் வந்த 10 பேர் கொண்ட கும்பல், திடீரென வழி மறித்தது. தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாள்களால் முத்துமாணிக்கத்தை சரமாரியாக வெட்டியது. இதில் முத்துமாணிக்கம் பரிதாபமாக இறந்தார். சவுந்தரபாண்டி மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். வேறொரு சமூகத்தைச் சேர்ந்த பெண்ணை, அவரது பெற்றோருக்கு தெரியாமல் தனது நண்பருக்கு திருமணம் செய்து வைத்து முத்துமாணிக்கம் உதவி இருக்கிறார். இதற்கு பழிவாங்கும் வகையிலேயே கும்பல் முத்துமாணிக்கத்தை கொலை செய்தது தெரியவந்துள்ளது.