வேலையை ரசித்து செய்யுங்கள்... வெற்றி தானாக வரும் -'ஆச்சி மசாலா' பத்மசிங் ஐசக் எக்ஸ்க்ளூசிவ்: வீடியோ
எந்த வேலையையும் ரசித்து செய்தால் வெற்றி தானாக வந்து சேரும் என ஆச்சிமசாலா நிறுவனர் பத்மசிங் ஐசக் கூறியுள்ளார்.
சென்னை: ரசித்து வேலை செய்கிறவன் வாழ்க்கையில் பெரிய உயரத்தை அடைகிறான் என ஆச்சி மசாலா நிறுவனர் பத்மசிங் ஐசக் தன் வெற்றி குறித்து பகிர்ந்துகொண்ட போது கூறினார்.
ஆச்சி மசாலா நிறுவனர் பத்மசிங் ஐசக் தன் வெற்றிக் கதையையும் தான் கடந்து வந்த பாதையையும் குறித்து ஒன் இந்தியாவிடம் பகிர்ந்துகொண்ட போது கூறியதாவது: என்னுடைய சொந்த ஊர் நாசரேத். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது. பள்ளிப்படிப்பை மர்காஷியஸ் பள்ளியில் முடித்தேன். ஆதித்தனார் கல்லூரியில் பிபிஏ படித்தேன்.
என் கல்லூரி காலம் மிகவும் அமைதியாகப் போனது. நான் எப்போதும் ஒரு சிந்தனையாளன்தான். எப்போதும் தேடல் உள்ளவன். ஆகையால் தான் என் ஊரிலேயே கல்லூரி இருந்த போதும் தினமும் 32 கிலோ மீட்டர் தூரம் சைக்கிளில் பயணித்து திருச்செந்தூர் சென்று பிபிஏ படித்தேன். எதையுமே வித்தியாசமாக செய்யவேண்டும் என விரும்புகிறவன்.
பிராண்ட் முக்கியம்
எங்கள் ஆச்சி நிறுவனம் 1998 ஆம் ஆண்டு ஆரம்பித்தோம். ஒரு பிராண்டட் புராடக்டை மக்களுக்கு கொண்டு செல்ல வேண்டும். அதை கடைநிலை மக்களுக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என நினைத்தோம். அதனால் தான் அப்போது உணவுத்துறையில் பிராண்ட் என எதுவும் இல்லாதபோது நாங்கள் 'ஆச்சி' என்ற பிராண்டை உருவாக்கினோம்.
சமையலறை ஆட்சி
தமிழகத்தின் தென்மாவட்டங்களில் பாட்டியை ஆச்சி என்றுதான் அழைப்போம். காரைக்குடியில் மூத்த பெண்களை ஆச்சி என்றுதான் அழைப்பார்கள். எனக்கு ஆச்சி என்ற பெயருக்கு ஒரு மரியாதை இருப்பதால் அதனையே பிராண்ட் ஆக உருவாக்கினோம். குறிப்பாக பெண்கள் ஆட்சி செய்யும் இடம் என்றால் அது சமையலறைதான். ஒரு நல்ல சமையலால் குடும்பத்தில் நல்ல பிணைப்பை உருவாக்க முடியும். அதனாலும் ஆட்சி என்கிற பெயரை தேர்வு செய்தோம்.
ஆச்சி ஓங்காரி
ஆட்சி என்கிற சொல்லில் இருந்துதான் ஆச்சி வந்தது. ஆச்சி என்றால் ஆளுதல் என்று அர்த்தம். எங்கள் ஆச்சி பிராண்ட் மார்க்கெட்டில் ஆளவேண்டும் என்ற நோக்கத்திலும் இந்த பெயரை தேர்வு செய்தோம். ஆச்சி என்னும் பெயரில் ஓங்காரம் இருக்கிறது. இன்று ஆச்சி மசாலாவை கோடிக்கணக்கான மக்கள் உபயோகிக்கிறார்கள்.
முதலாளிகள் உருவாக்கம்
நிறைய விவசாயிகளிடம் இருந்து நேரடியாக விளைபொருட்களை கொள்முதல் செய்கிறோம். நிறைய பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்கியிருக்கிறேன். எங்கள் நிறுவனத்தில் 4000 - 5000 ஏஜெண்டுகளை உருவாக்கியிருக்கிறோம். அதாவது அவர்களை முதலாளிகளாக உருவாக்கியுள்ளோம்.
கனவு கண்டேன்
நான் ஒரு தெளிவான முடிவை எடுத்துத்தான் இந்த தொழிலுக்குள் வந்தேன். ஆனால் ஆறேழு வருடங்கள் கடுமையாகப் போராடினேன். குறிப்பாக நான் எங்கு செல்கிறேன், என்ன செய்துகொண்டிருக்கிறேன் என்பதை கனவு கண்டேன். உணவுத்துறையில் இதைச் செய்ய வேண்டும் என கனவு கண்டேன். அதற்காகப் போராடினேன். அதனால் வெற்றியடைந்தேன். நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தேன்.
வேலையை ருசியுங்கள்
இளைஞர்களுக்கு குறிப்பாக ஒன்றை சொல்ல ஆசைப்படுகிறேன். ஒருவேலையை ரசித்து, ருசித்து செய்தால் உங்கள் பங்களிப்பு அதிகமாகும். பின்னர் நீங்கள் உயரத்துக்கு செல்வதை தடுக்க முடியாது. வேலை செய்யும் இடத்தில் நானும் இதன் முதலாளி என்ற எண்ணத்தில் வேலை செய்யுங்கள். நேரம் பார்க்காதீர்கள். அந்த உழைப்பால் மேலே செல்வீர்கள். அதை அனுபவியுங்கள்.
பணியே சுவாசம்
இதை நான் என் வாழ்வில் உணர்ந்துள்ளேன். காட்ரேஜ் கம்பனியில் வேலை செய்தபோது, அதை என் கம்பெனி என நினைத்துத்தான் வேலை செய்தேன். நேரம் பார்த்து வேலை செய்தது இல்லை. ஆச்சி நிறுவனம் என் மூச்சு. ஒருவேலையை செய்யும்போது அதை சுவாசிப்பது போல் செய்ய வேண்டும். அப்படி செய்தால் வெற்றி உங்களைத் தேடி வரும்.
பயபக்தி வெற்றி தரும்
கடவுள் என்னை இந்த வேலைக்கு பயன்படுத்திக்கொண்டுள்ளார். கடவுளிடம் சரணடைந்தால் அவர் நம்மை உயரத்துக்கு எடுத்துச் செல்வார். கடவுளுக்கு எப்போதும் நன்றியுடைவனாகவே இருக்கிறேன். பயபக்தியுடன் வேலை செய்யும்போது வெற்றிமேல் வெற்றி வந்து சேரும் என்பதுதான் என் அனுபவம்.