ஆதார் இல்லாட்டி உங்க கல்யாணத்துக்கு "ஆதாரமே" இருக்காதாம், பார்த்துக்கங்க!
திருமணத்தை பதிவு செய்ய ஆதார் அட்டை நகலை பெற வேண்டும் என்று பதிவுத்துறை ஐஜி டிஐஜிக்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
சென்னை: திருமணத்தை பதிவு செய்ய ஆதார் அட்டை நகலை பெற வேண்டும் என்று பதிவுத்துறை ஐஜி டிஐஜிக்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
தமிழகத்தில் 578 சார்பதிவு அலுவலகங்கள் உள்ளது. இதன் மூலம் திருமணம் பதிவு செய்யப்பட்டு வருகிறது. திருமணம் நடைபெற்ற தேதியில் இருந்து 90 நாட்கள் திருமணத்தை பதிவு செய்ய வேண்டும். இதற்காக, 100 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
மக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லாததால் திருமண பதிவு ஆண்டுக்கு ஆண்டு குறைந்தது. இதை தொடர்ந்து மாநிலத்தில் நடைபெறும் அனைத்து திருமணங்களை பதிவு செய்யும் நோக்குடன் கடந்த 2009ல் தமிழ்நாடு திருமண பதிவு சட்டம் இயற்றப்பட்டது.
அதன் பிறகு 90 நாட்களுக்குள் திருமணத்தை பதிவு செய்யவில்லை சட்டப்படி குற்ற தண்டனை விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதை தொடர்ந்து திருமணத்தின் பதிவு ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது.
அடையாள ஆவணங்கள் இணைப்பு
திருமணத்தை பதிவு செய்யும் போது, அதனுடன் அழைப்பிதழை இணைக்க வேண்டும். மேலும், மணமக்கள், பெற்றோர் மற்றும் சாட்சிகளின் அடையாள ஆவணமாக ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை உட்பட 11 ஆவணங்களில் ஏதாவது ஒரு ஆவண நகல்களை வைக்க வேண்டும்.
சார்பதிவாளர்களுக்கு சுற்றறிக்கை
திருமணத்தை பதிவு செய்யும் போது தற்போது ஆதார் அட்டையையும் ஒரு அடையாள ஆவணமாக ஏற்ற கொள்ள பதிவுத்துறை ஐஜி குமரகுருபரன் டிஐஜிக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். இது குறித்து குமரகுருபரன் அனைத்து மண்டல துணை பதிவுத்துறை தலைவர், சார்பதிவாளர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.
அடையாள ஆவணம்
அதில், மணமக்கள், பெற்றோர் மற்றும் சாட்சிகளின் அடையாள ஆதார ஆவணமாக ஏற்கனவே பரிந்துரைக்கப்பட்ட ஆவணங்களுடன் தற்போது ஆதார் அடையாள அட்டையையும் ஒரு அடையாள ஆவணமாக ஏற்று பதிவு மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.
அதிகாரிகளுக்கு உத்தரவு
மணமக்களின் பெற்றோரது பெயர்கள் மற்றும் முகவரிகளை சரி பார்க்கும் பொழுது அவர்கள் தாக்கல் செய்யும் ஆதார ஆவணங்களில் கண்டுள்ள பெயர் மற்றும் முதலெழுத்தும் விண்ணப்பத்தில் பூர்த்தி செய்யப்பட்ட பெயர் மற்றும் முதலெழுத்தும் மற்றும் முகவரிகள் ஒத்துள்ளதா என பதிவு அலுவலர்கள் நன்று பரிசீலித்த பின்னரே பதிவு மேற்கொள்ள வேண்டும்.
அசல் சரிபாப்பது அவசியம்
மணமக்களின் பெற்றோர் யாரேனும் இறந்து விட்டதாக விண்ணப்பத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், இறந்தவரின் அசல் இறப்பு சான்றை சரிபார்த்து அதன் நகல் பெறப்பட்டு கோர்வை செய்ய வேண்டும். மேலும் மணமக்களில் யாரேனும் ஒருவர் கணவர் அல்லது மனைவியை இழந்தவர் என விண்ணப்பத்தில் குறிப்பிடும் நிகழ்வில் இறந்த கணவர்/மனைவியின் இறப்பு சான்றின் அசலை சரிபார்த்து அதன் நகலை கண்டிப்பாக பெற்று கோர்வை செய்த பின்னரே பதிவு மேற்கொள்ள வேண்டும்' என்று அதில் கூறப்பட்டுள்ளது.