ஜனவரி முதல் ஆதார் அட்டை காட்டினால் மட்டுமே ரேஷன் கடையில் பொருள் வாங்க முடியும் !
ஜனவரி முதல் ஆதார் காட்டினால் மட்டுமே ரேஷன் பொருள் விநியோகம் செய்யப்படும் என
சென்னை: வரும் ஜனவரி மாதம் முதல் ஆதார் அட்டையை காண்பித்தால் மட்டுமே பொருட்களை விநியோகம் செய்ய வேண்டுமென ஊழியர்களுக்கு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரேஷன் கடைகளில் நடைபெறும் முறைகேடுகளை தடுக்க 'ஸ்மார்ட் கார்டு' வடிவில் ரேஷன் கார்டுகளை வழங்க அரசு திட்டமிட்டுள்ளதாம். மற்றொரு பக்கம், ஆதார் அட்டை நகலை ரேஷன் கடைகளில் தர வேண்டும் என்று உணவு வழங்கல் துறை கேட்டுக்கொண்டது.
ரேஷன்கார்டுதாரருக்கு வழங்கப்படும் பொருட்களுக்கு ரசீது வழங்குவதற்கு பதிலாக, பொருட்களின் விவரம், அளவு, விலை, மொத்த தொகை, வாங்காத பொருட்களின் விவரங்கள் அவர்களது குடும்ப அட்டைதாரர்களின் செல்போனுக்கு எஸ்எம்எஸ் மூலம் தெரிவிக்கப்பட உள்ளது. இதன் மூலம் கடையில் உள்ள இருப்பு விவரத்தையும் தெரிந்து கொள்ள முடியும். இதை காரணமாக காட்டி, செல்போன் எண்ணுடன் ஆதார் நகலையும் தர வற்புறுத்துகிறார்கள் ரேஷன் கடை ஊழியர்கள்.
2017ம் ஆண்டு முதல் ஸ்மார்ட் கார்டு வழங்குவதற்காக, ரேஷன் கார்டுகளில் குடும்ப உறுப்பினர்களின் ஆதார் எண், செல்போன் எண்களை இணைக்கும் பணி கடந்த செப்டம்பர் முதல் நடந்து வருகிறது. தமிழகத்தில் இதுவரை 70 சதவீதம் பேர் மட்டுமே ஆதார் எண் பதிவு செய்துள்ளனர். மீதி 30 சதவீதம் பேர் ஆதார் எண் பதிவு செய்யவில்லை.
ஆதார் பதிவு செய்யாத ரேஷன் கார்டுகளை சென்னையில் உள்ள மாநில உணவுப்பொருள் வழங்கல் துறை ஆணையர் அலுவலகம் கடந்த மாதம் 25ம் தேதி தற்காலிகமாக முடக்கி வைத்துள்ளது. ரேஷன் கார்டில் குடும்ப உறுப்பினர்களின் ஆதார் எண்களை இணைத்தவர்கள், இணைக்காதவர்கள் என தனித்தனியாக விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.
உள்தாள் இணைப்பு குறித்து அரசிடம் இருந்து தகவல் வராத நிலையில், ஜனவரி முதல் ஆதார், செல்போன் எண்களை இணைத்தவர்கள், ஆதார் அட்டை அல்லது செல்போன்களை கொண்டு வந்தால், அவர்களுக்கு ரேஷன் பொருட்களை வழங்க ஊழியர்களுக்கு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். மேலும், ஆதார் எண்களை இணைக்காதவர்களின் வீடுகளுக்கு சென்று, அதற்கான காரணம் என்ன அல்லது போலி கார்டா என்பது குறித்து ஆய்வு நடத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.