ஆதார் எண்ணை, பான் கார்டுடன் இணைக்க நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்!
சென்னை: உங்கள் பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டியது கட்டாயமாகும்.
அனைத்து சேவைகளிலும் ஆதார் எண்ணை இணைப்பதில் மத்திய அரசு மிகுந்த துரிதம் காட்டி வருகிறது. வங்கிசேவை, காஸ் இணைப்பு என பல அத்தியாவசிய தேவைகளுக்கும் ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ளது.
முறைகேடாக வெளியேரும் பல ஆயிரம் கோடிகளை மிச்சப்படுத்த ஆதார் இணைப்பு அவசியம் என்பது மத்திய அரசு வாதம். ஆனால், ஆதார் அட்டை அனைவருக்குமே கிடைக்காத நிலையில், இப்படி அவசரப்படுவது நடைமுறைக்கு எதிரானது என்பது பொதுமக்கள் குமுறல்.
கட்டாய உத்தரவு
இந்த சூழ்நிலையில்தான், பான் கார்டுடன் ஆதார் அட்டையை இணைக்க வேண்டும் என்ற கட்டாய உத்தரவை பிறப்பித்துள்ளது மத்திய அரசு. இன்றுடன் இதற்கான காலக்கெடு நிறைவடைகிறது. ஜூலை 1ம் தேதி முதல் ஆதார் எண் இணைக்கப்படாத பான்கார்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அந்த காலக்கெடுவை நீட்டித்துள்ளது அரசு. அடுத்த தேதி அறிவிக்கும்வரை இணைத்துக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறு சலுகை
இதுகுறித்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், ஆதார் எண் இன்னும் கிடைக்காதவர்களுக்கு இந்த உத்தரவு பொருந்தாது என்று அறிவித்துள்ளது. ஆனால் இரு எண்களும் வைத்திருப்போர் அதை கூடிய விரைவில் செய்ய வேண்டும்.
இணைக்கும் வழி
இரு எண்களையும் இணைக்க சில வழிமுறைகள் உள்ளன. இன்கம்டாக்ஸ் வெப்சைட்டில் உங்களை பற்றி ரிஜிஸ்டர் செய்ய வேண்டும். வெப்சைட்டின் மேல் பகுதியில் 'profile settings'என்ற பகுதியை கிளிக் செய்யவும். அதில் உங்கள் பெர்சனல் தகவல்களை பதிவு செய்யவும். அந்த தகவல்கள் பொருந்திப்போனால், 'Link now' என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும். பிறகு இரு ஆவணங்களும் இணைந்துவிட்டன என்று பாப்அப் மெசேஜ் ஒன்று வரும். இரு அட்டைகளிலும் பெயர் உள்ளிட்டவற்றில் ஒரே விவரம் இருந்தால் மட்டுமே லிங்க் செய்ய முடியும்.
எஸ்எம்எஸ்
இதுதவிர எஸ்எம்எஸ் மூலமாகவும் ஆதார் எண்ணை, பான் எண்ணோடு இணைக்கலாம். 567678 அல்லது 56161 என்ற எண்ணுக்கு ஆதார் கார்டிலுள்ள உங்கள் தொலைபேசி எண்ணிலிருந்து எஸ்எம்எஸ் அனுப்பினால் இரு ஆவணங்களும் இமைந்து்விடும்.
ஆவணங்கள் அவசியம்
இரு ஆவணங்களையும் இணைப்பது எளிது போல தெரிந்தாலும், இரு ஆவணங்களிலும் ஒரே மாதிரி தகவல் இருப்பது அவசியம். விவரங்கள் மாறுபட்டால் இரு ஆவணங்களையும் இணைக்க முடியாது. திருமணத்திற்கு பிறகு கணவன் பெயரை சிலர் பெயருக்கு பின்னால் சேர்த்து ஆதார் அட்டை எடுத்திருப்பார்கள். ஆனால் பான் அட்டையில் அந்த பெயர் இருக்காது. இப்படி இருந்தாலும், இரு ஆவணங்களையும் இணைக்க முடியாது.
பாஸ்வேர்ட்
ஆனால் இப்படி இரு ஆவணங்களிலும் வேறுபட்ட தகவல் இருந்தால் அதை இணைக்க OTP ஆப்ஷனை வைத்துள்ளது வருமான வரித்துறை. ஆதார் அட்டையுடன் பதியப்பட்ட செல்போன் எண்ணுக்கு OTP அனுப்பப்படும். அதை வைத்து இணைத்துக்கொள்ளலாம்.
அவசரத்தால் அவதி
ஆதார் அட்டை எண்ணை பான் எண்ணுடன் இணைக்க வேண்டியுள்ளதில் அரசு அவசரம் காட்டுவதால் மக்கள் அலைபாய்ந்தபடி உள்ளனர். மேலும், இதில் பாதுகாப்பு அம்ச குறைபாடு இருக்கலாம் என்ற சந்தேகத்தையும் புறம்தள்ள முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.