பிளஸ்-2 மாணவர்கள் இலவச லேப்டாப் வாங்க “ஆதார் எண்” அவசியம் - பள்ளிக் கல்வித்துறை
சென்னை: தமிழகத்தில் பிளஸ்-2 மாணவர்கள் இலவசமாக அளிக்கப்படுகின்ற மடிக்கணினியினைப் பெறுவதற்கு ஆதார் எண் அவசியம் என்று பள்ளிக் கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் ச.கண்ணப்பன் அனைத்து முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.
அதில், "அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பிளஸ்-2 படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு விலை இல்லா மடிக்கணினி வழங்குவதற்கு முன்பாக மாணவர்களிடம் ஆதார் எண் பெறப்படவேண்டும்.
பிளஸ்-2 சான்றிதழ் வழங்கும்போது மாணவ, மாணவிகளிடம் அவர்களுடைய ஆதார் எண் பெற்று உரிய பதிவேட்டில் குறித்து வைத்துக் கொள்ள வேண்டும். பெறப்பட்ட ஆதார் எண் விவரத்தை மடிக்கணினி வழங்க ஏதுவாக எல்காட் ஆன்லைனில் பதிவு செய்திட வேண்டும்.
அனைத்து மாவட்ட பள்ளிக்கூட தலைமை ஆசிரியர்கள் மாணவ, மாணவிகளின் ஆதார் எண் பெற உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். இதுகுறித்து அனைத்து முதன்மை கல்வி அதிகாரிகளும் அறிக்கை அனுப்புங்கள்" என்று தெரிவித்துள்ளார்.
ஆனால் கடந்த கல்வி ஆண்டில் படித்தவர்களுக்கு பெரும்பாலான இடங்களில் மடிக்கணினி வழங்கப்பட்டுவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.