டிசம்பர் 31-க்குள் ஆதார் அட்டையுடன் ரேஷன் கார்டை இணைக்க கெடு
டிசம்பர் 31-ம் தேதிக்குள் ரேஷன் கார்டுடன், ஆதார் அட்டை எண்ணை இணைக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை: தமிழகத்தில் டிசம்பர் 31-ஆம் தேதிக்குள் ஆதார் அட்டையுடன் இணைக்க வேண்டும் உணவு பொருள்கள் வழங்கல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பொது விநியோகத் திட்டம் கணினிமயமாக்கப்பட்டு, தற்போது ஒரு கோடியே 92 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கும் ஸ்மார்ட் கார்டுகள் வழங்கப்பட்டு வருகின்றன. முன்னதாக, இந்த திட்டத்தை செயல்படுத்த, குடும்ப அட்டையுடன், ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.
இதையடுத்து, பொதுமக்கள் கைபேசி செயலி மூலமும், நேரடியாக நியாய விலைக்கடையிலும் ஆதார் எண்ணை இணைத்தனர். ஆதார் எண்ணை இணைத்தவர்களுக்கு மட்டுமே தற்போது ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட்டு வருகிறது.
ரேஷன் கார்டுடன் ஆதார் இணைப்புக்கு முதலில் செப்டம்பர் 31-ஆம் தேதி இறுதி நாளாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் டிசம்பர் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு குறித்த கெடுவுக்குள் இணைக்கப்படாவிட்டால் ரேஷன் கார்டு ரத்து செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.