அம்மா இருசக்கர வாகனம் வாங்க ஆதார் அவசியம் - அரசு அறிவிப்பு
அம்மா இருசக்கர வாகனம் வாங்க ஆதார் அவசியம் என்றும் பிப்ரவரி 5ஆம் தேதி முதல் வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் விண்ணப்பிக்கலாம் என்றும் அரசு அறிவித்துள்ளது.
சென்னை: பெண்களுக்கான இருசக்கர வாகன மானியம் ரூ.25ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. பிப்ரவரி 24 ஆம் தேதி ஜெயலலிதா பிறந்தநாளன்று வாகனங்கள் வழங்கப்பட உள்ளன. இந்த திட்டத்தில் விண்ணப்பிக்க ஆதார் கார்டு அவசியம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
2016ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலின் போது தேர்தல் அறிக்கை வெளியிட்ட மறைந்த அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா, மகளிருக்கு மானிய விலையில் இருசக்கர வாகனம் வழங்கப்படும் என்று கூறினார். அதிமுக ஆட்சிக்கு வந்த சில மாதங்களில் ஜெயலலிதா மரணமடைந்தார்.
எடப்பாடி பழனிச்சாமி முதல்வரான பின்னர் அந்த திட்டத்திற்கு உயிரூட்டப்பட்டது. இந்த நிலையில் சட்டசபையில் ஆளுநர் உரை வாசித்த பன்வாரிலால் புரோஹித்,பெண்களுக்கு இரு சக்கர வாகனம் வாங்க மானியம் அளிக்கும் திட்டம் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்றும், அதற்கு வழங்க அளிக்கப்பட இருந்த மானியத்தொகை 20,000 ஆயிரம் ரூபாயில் இருந்து 25,000 ரூபாயாக உயர்த்தப்பட்டு உள்ளதாகவும் அறிவித்தார்.
இந்த நிலையில் பிப்ரவரி 24ஆம் தேதி முதல் மகளிருக்கு மானிய விலையில் இருசக்கர வாகனம் வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் பிப்ரவரி 5ஆம் தேதி முதல் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் வழங்கப்படும் என்றும் ஆதார் கார்டுடன் விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 10ஆம் தேதியன்று களஆய்விற்குப் பின்னர் வாகனம் வழங்கப்படும் என்றும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.