ஆடி அமாவாசை, ஆடிப்பெருக்கு: பக்தர்கள் புனித நீராடல்- முன்னோர்களுக்கு தர்ப்பணம்
ராமேஸ்வரம்: ஆடி அமாவாசை, ஆடிப்பெருக்கு தினமான இன்று பக்தர்கள் ராமேஸ்வரம், கன்னியாகுமரி வேதாரண்யம்,கோடியக்கரை கடல்களில் பக்தர்கள் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்பணம் அளித்து வழிபட்டனர்.
குற்றாலம், காவிரி பாயும் அம்மா மண்டபம் பகுதிகளிலும் ஆடி ஆமாவாசையை முன்னிட்டு பக்தர்கள் புனித நீராடி தர்பணம் செய்தனர்.
இந்துக்கள் மாதந்தோறும் வரும் அமாவாசை தினங்களில் விரதம் இருந்து தங்களது முன்னார்கள் நினைவாக வழிபாடு நடத்துவர். இவற்றில் ஆடி, தை, புரட்டாசி மாதங்களில் வரும் அமாவாசை தினங்கள் சிறப்பானதாகும். அதேபோல ஆடி பதினெட்டாம் பெருக்கு பண்டிகையும் சிறப்பாக கொண்டாடப்படும் பண்டிகையாகும்.
இந்த தினங்களில் நாடு முழுவதிலும் உள்ள குளங்கள், ஆறுகள், நதிகள், கடல்களில் புனித நீராடி, இறந்துபோன தங்கள் முன்னோர்கள் நினைவாக சிறப்பு பிரார்த்தனைகள் நடத்தி வழிபடுவர்.
ஆடி அமாவாசை தினமான இன்று ஒரே நாளில் லட்சகணக்கான பக்தர்கள் ராமேஸ்வரத்தில் திரண்டதால், கோயிலில் தீர்த்தமாடவும், சாமி தரிசனம் செய்யவும் பக்தர்கள் கோயிலின் 4 ரத வீதிகளிலும் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
அமாவாசை தினத்தை முன்னிட்டு ராமநாதசுவாமி கோயில் இன்று அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு அதனை தொடர்ந்து ஸ்படிகலிங்க பூஜையும் தொடர்ந்து சுவாமிக்கு அபிஷேக ஆராதனையும் நடந்தது.
கன்னியாகுமரி, வேதாரண்யம், திருச்செந்தூர் உள்ளிட்ட புனித தலங்களில் அதிகாலை முதலே பக்தர்கள் கடலில் நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர். பூம்புகாரிலும் காவிரி நதி கடலில் கலக்கும் இடத்தில் பக்தர்கள் நீராடி தர்ப்பணம் கொடுத்தனர்.
ஆடி அமாவாசையுடன் ஆடிப்பெருக்கு பண்டிகையும் இணைந்து கொண்டதால் நீர் நிலைகளில் பக்தர்களின் கூட்டம் வழக்கத்தை விட அலைமோதியது. திருச்சியில் காவிரியாற்றில் அம்மாமண்டபம் படித்துறை, சிந்தாமணி ஓடத்துறை படித்துறை, தில்லைநாயகம் படித்துறை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் காவிரி கரைகளில் பொதுமக்கள் ஓரு பக்கம் ஆடி அமாவாசை தர்பணம் நடைபெற்றது. மற்றொரு புறம் ஆடிப்பெருக்கு விழாவை கோலாகலமாக கொண்டாடினர்.
ஈரோடு பவானி கூடுதுறை, கொடுமுடி, திருப்பூர் மாவட்டம் உடுமலை உள்ளிட்ட இடங்களிலும் புனித நீராடிய பக்தர்கள் தர்ப்பணம் செய்தனர். ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு காவிரி கரைகளில் பொதுமக்கள், புதுமண தம்பதிகள் குவிந்தனர். படித்துறையில் வாழை இலையில் கலசம், வாழைப்பழம், தேங்காய், மஞ்சள், குங்குமம், பழவகைகள், கரும்பு, வெற்றிலைபாக்கு, காதோலை கருகமணி, காப்பரிசி உள்பட மங்கல பொருட்களை வைத்து கற்பூரதீபம் காட்டி காவிரி அன்னையை வழிபட்டனர். பின்னர் பெண்கள் புது தாலிக்கயிறை மாற்றிக்கொண்டனர்.