ஆடி அமாவாசை: சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி
மதுரை: ஆடி அமாவாசையை முன்னிட்டு வருகிற ஜூலை 28ம்தேதி முதல் ஆகஸ்டு 4ம்தேதி வரை சதுரகிரி மலைக்கு சென்றுவர பக்தர்களுக்கு நிபந்தனையுடன் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலையின் தென் பகுதியில் மதுரை மாவட்டம் பேரையூர் அருகே உள்ள சாப்டூர், தாணிப்பாறை ஆகிய பகுதிகளில் சிவகிரி, விஷ்ணுகிரி, பிரம்மகிரி, சித்தகிரி ஆகிய 4 மலைகளுக்கு நடுவில் இருக்கும் சதுரகிரியில் சுந்தர மகாலிங்கம், சந்தன மகாலிங்கம் கோவில் உள்ளது.
காவல் தெய்வங்களான பைரவமூர்த்தி, காளியம்மன், பேச்சியம்மன், பிலாவடி கருப்பணசாமி ஆகியவற்றுக்கும் இங்கு கோவில்கள் உள்ளன.
சதுரகிரி மலை
சித்தர்கள் வாழும் மலை என்று பக்தர்களால் போற்றப்படும் சதுரகிரி மலையில் அமாவாசை, பவுர்ணமி, பிரதோஷம், நவராத்திரி, மகாசிவராத்திரி உள்ளிட்ட நாட்களில் விசேஷ பூஜைகளும், ஆராதனைகளும் நடைபெறும். இதில் ஆடி அமாவாசை பிரசித்த பெற்ற திருவிழாவாகும்.
ஆடி அமாவாசை விழா
ஆடி அமாவாசை தினத்தன்று தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கில் பக்தர்கள் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்வர். சதுரகிரி கோவிலில் ஆடி அமாவாசை வருகிற 2ம்தேதி நடைபெறுகிறது.
சிறப்பு பூஜைகள்
ஆடி அமாவாசையை முன்னிட்டு அன்றைய தினம் காலை 6 மணிக்கு 18 வகையான சிறப்பு அபிஷேகம், சிறப்பு அலங்காரம், தீபாராதனைகள் நடைபெறும். பகல் 12 மணிக்கு உச்சிகால பூஜை, மாலை 4 மணிக்கு சயாட்சை பூஜை, இரவு 7 மணிக்கு அர்த்தஜாம பூஜை நடைபெறும். சுவாமி தரிசனம் செய்ய லட்சக்கணக்கில் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
பக்தர்கள் அனுமதி
ஆடி அமாவாசையை முன்னிட்டு பக்தர்கள் சதுரகிரி மலைக்கு செல்ல வருகிற 28ம்தேதி முதல் ஆகஸ்டு 4ம்தேதி வரை சதுரகிரி மலைக்கு சென்றுவர பக்தர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். இதையொட்டி சதுரகிரி அடிவார பகுதியான தாணிப் பாறையில் தற்காலிக கடைகள், குடில்கள், கார் நிறுத்துமிடங்கள், அன்னதான கூடங்கள் அமைக்கும் பணி நடைபெறுகின்றன.
பாதுகாப்பு பணி
பக்தர்கள் பாதுகாப்பு பணியில் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த போலீசாரும், மதுரை மாவட்ட போலீசாரும் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மேலும் வனத்துறை, தீயணைப்புத்துறையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.
ஆட்சியர் தலைமையில் கூட்டம்
சதுரகிரி மகாலிங்கம் கோயிலில் ஆடி அமாவாசை திருவிழாவிற்கான முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் தே.கல்லுப்பட்டி ஒன்றிய அலுவலகத்தில் மதுரை மாவட்ட ஆட்சியர் கோ. வீரராகவராவ் தலைமையில் நடைபெற்றது. இதில் பக்தர்கள் மலைமேல் ஏறுவதற்கு காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரை மட்டுமே அனுமதிப்பது, பாலிதீன் பொருள்களை எடுத்து செல்லக் கூடாது என அறிவுறுத்தப்பட்டது.
மருத்துவ முகாம்
வாழைத்தோப்பு, தாணிப்பாறை, சங்கிலிபாறை, இரட்டை லிங்கம், காத்தாடி மேடு, குளிராட்டி பாறை ஆகிய இடங்களில் மருத்துவ முகாம்கள், டோலி வசதியும் செய்ய அறிவுறுத்தப்பட்டது. தாணிப்பாறை மற்றும் வாழைத்தோப்பு பகுதிகளில் தீயணைப்பு மற்றும் மீட்பு வாகனங்கள், ஆம்புலன்ஸ்கள் நிறுத்தவும் அறிவுறுத்தப்பட்டது.
அடிப்படை வசதிகள்
அடிவாரம் மற்றும் மலைமேல் உள்ள இடங்களில் போலீஸ் மற்றும் தீயணைப்பு துறையினார் பாதுகாப்புக்காக நிறுத்துவது, மலைப்பாதையில் 200 மீட்டர் இடைவெளியில் குடிநீர் தொட்டிகள் அமைக்கப்பது, மின்விளக்குகள், கழிவறை வசதிகள் செய்து தர அந்தந்த துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
சிறப்பு பேருந்துகள்
மதுரை மாட்டுத்தாவணி, விருதுநகர், ஸ்ரீவில்லிபுத்தூர், பேரையூர், உசிலம்பட்டி, ராஜபாளையம் ஆகிய இடங்களிலிருந்து தாணிப்பாறைக்கும், வாழைத்தோப்பு பகுதிக்கும் சிறப்பு பேருந்துகள் இயக்குவது என்றும் முடிவெடுக்கப்பட்டது.