ஆடி செவ்வாய், பவுர்ணமி... அம்மன் ஆலயங்களில் குவிந்த பக்தர்கள் கூட்டம்
சென்னை: ஆடி முதல் செவ்வாய்கிழமை மற்றும் ஆடி பவுர்ணமியை முன்னிட்டு தமிழகம் முழுவதிலும் அம்மன் ஆலயங்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. சென்னையில் உள்ள பிரசித்தி பெற்ற முண்டகக் கண்ணியம்மன், கோலவிழியம்மன் ஆலயங்களில் காலை முதலே பெண்கள் பொங்கல் வைத்தும், கூழ் ஊற்றியும் வழிபட்டு வருகின்றனர்.
ஆடி செவ்வாய் தேடிக்குளி அரைச்ச மஞ்சள் பூசிக்குளி என்பது பழமொழி. பொதுவாகவே பெண்கள் மஞ்சள் பூசிக் குளிப்பது விசேஷம். குறிப்பாக, ஆடி செவ்வாய்க் கிழமைகளில் எண்ணெய் தேய்த்து, மஞ்சள் பூசி குளித்து, விரதம் இருந்து அம்மனை வழிபட்டால் மாங்கல்ய பாக்கியம் கூடும் என்பது நம்பிக்கை.
சனிக் கிரகம்போல் ஒரு ஜாதகருக்குப் பெரும் தோஷத்தை ஏற்படுத்தக் கூடியது செவ்வாய் கிரகம். செவ்வாய், சனி போன்ற பாவக் கிரகங்கள் கோசாரமாக சஞ்சாரம் செய்யும் போது அதன் கதிர் வீச்சுக்கள் மக்களை தீவிரமாக தாக்குகின்றன. அதனால் அந்த ஜாதகர் உடல், உள்ளம் ரீதியாக பெரும் பாதிப்பை பெறுகின்றார்.
தீய கிரகங்களில் இருந்து வரும் கதிர்களை நல்லெண்ணையில் பூசப்பட்ட உடம்பு தாக்க விடாது தடை செய்கின்றது. தீய கதிர்கள் பெண்களின் உடலில் தாக்கத்தினை ஏற்படுத்தாது இதை தடுக்கவே இந்த எண்ணை முழுக்கு அவசியம் என கூறியுள்ளனர் நம் முன்னோர்கள்.
மாங்கல்ய பலம்
ஆடி செவ்வாய்க் கிழமைகளில் பெண்கள் எண்ணெய் வைத்து, மஞ்சள் பூசிக் தோய்ந்து விரதம் அனுஷ்டித்து அம்மனை வழிபட்டு வந்தால் மாங்கல்ய பலம் கூடும், தோஷங்கள் நிவர்த்தியாகும், மாங்கல்யத் தடை நீங்கும், பிள்ளைப் பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
அம்மன் வழிபாடு
ஆடி - செவ்வாய்க்கிழமைகளில் அம்பாளை வழிபட்டு, மங்கல கௌரி விரதம் கடைப்பிடிப்பதாலும் விசேஷ பலன்கள் கைகூடும். ஆடிச்செவ்வாய் விரதம் துர்க்கை, முருகனுக்குரிய விரதமாகும். முருகப் பெருமானின் அவதாரமே செவ்வாய்க் கிரகம் என்று சோதிட நூல்கள் கூறுகின்றன.
ராகு கால பூஜை
செவ்வாய்க் கிழமைகளில் இராகு காலத்தில் மாலை 3 மணி தொடக்கம் 4.30 மணிவரை உள்ள காலத்தில் அம்பிகையை பூசிப்பது விசேடமானது என்று இந்துக்கள் கருதுகிறார்கள். பத்திரகாளி இராகுவாக அவதாரம் செய்தார் என்றும் கூறுவர்.
நாக தோஷம் நீங்கும்
செவ்வாய் தோஷத்தாலும், நாகதோஷத்தாலும் திருமணம் தடைப்பட்டவர்கள், குழந்தைப் பாக்கியம் இல்லாதவர்கள் செவ்வாய்க் கிழமைகளில் இராகுகாலப் பூஜைகளில் பங்கு பெற்று வழிபடுவதால் தோஷம் நிவர்த்தியாகி திருமணமப் பாக்கியமும், குழந்தை பாக்கியமும் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
திருமண தடை நீங்கும்
ஆடிச்செவ்வாயில் மட்டுமன்றிப் பொதுவாகச் செவ்வாய்க் கிழமைகளில் அம்பிகையை மட்டுமல்ல முருகப் பெருமானையும் வேண்டி விரதம் கடைப்பிடிப்பது பலன் தரக்கூடியது. திருமணமான பெண்கள் தம் கணவனின் குறையாத அன்பைப் பெறவும், மாங்கல்யம் நிலைக்கவும், மணமாகாத இளம் பெண்கள் நல்ல கணவன் கிடைக்கவும், விவாகத் தடைகள் நீங்கவும், இவ் விரத்தை அனுஷ்டிக்கின்றனர்.
ஔவையார் விரதம்
ஆடி மாத செவ்வாயன்று பெண்கள் ஓளவையார் விரதம் இருப்பர். கணவனின் ஆயுள் நீடிக்கவும், குழந்தை வரம் வேண்டியும், குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கவும், பெண்களுக்கு விரைவில் திருமண வரம் கிடைக்கவும் இந்த விரதத்தை அனுஷ்டிக்கின்றனர்.
ஆண்களுக்கு அனுமதியில்லை
ஔவையார் விரதத்தை ஆண் குழந்தைகள், ஆண்களையோ கலந்து கொள்ளவோ பார்வையிடவோ அனுமதிப்பதில்லை. பூஜை முடிந்தபின் வழிபாடு நடந்த இடத்தை சுத்தம் செய்துவிடுவர். இதை கடைபிடித்தால் குடும்ப ஒன்றுமை நிலைக்கும், திருமணம் கைகூடும், குழந்தை பாக்கியம் கிடைக்கும் என நம்பப்படுகிறது.
ஆடி பௌர்ணமி
ஆடி மாதத்தில் வருகிற பௌர்ணமி ரொம்பவே விசேஷம். மாதந்தோறும் வருகிற பௌர்ணமியில் கோயிலுக்குச் சென்று, வழிபடுவதும் விசேஷம்.
ஆடி மாதம் பவுர்ணமியான இன்றைய தினம் 19ம் தேதி அம்மன் கோயில்களில் விசேஷ பூஜைகளும் வழிபாடுகளும் நடைபெறுகின்றன.
அம்மன் ஆலயங்களில் வழிபாடு
ஆடி மாதம் பௌர்ணமி என்பது சிவ வழிபாட்டுக்கு மட்டுமின்றி அம்மன் வழிபாட்டுக்கும் உகந்த அற்புதமான நன்னாள். என்பதால் அம்மன் ஆலயங்களில் விசேஷ வழிபாடுகள் நடைபெறும். அம்பாளுக்கு அபிஷேகங்கள் செய்து, புடவை சார்த்தி, பொங்கல் படையலிட்டு வழிபட்டால், குடும்பத்தில் வளம் பெருகும். நிம்மதி குடிகொள்ளும். தம்பதி ஒற்றுமை மேலோங்கும்!
அம்மன் ஆலயங்களில் கூட்டம்
ஆடி முதல் செவ்வாய் உடன் இன்றைய தினம் பவுர்ணமியும் இணைந்து வந்துள்ளதால் அம்மன் ஆலயங்களிலும் முருகன் ஆலயங்களிலும் பக்தர்கள் கூட்டம் காலை முதலே அதிகரித்துள்ளது. ஏராளமானோர் பொங்கல் வைத்தும், கூழ் ஊற்றியும் சிறப்பு வழிபாடு செய்து வருகின்றனர்.
நிம்மதி பெருகும்
ஆடி பௌர்ணமியும் சிறப்பு. ஆடி செவ்வாயன்று அம்மனை விளக்கேற்றி வழிபடுவதும் மிகுந்த பலனைத் தரும். எனவே பௌர்ணமி தினமான இன்று பெண்கள், அம்மன் கோயில்களில் காலையும் மாலையும் விளக்கேற்றி வழிபட்டால் குடும்பத்தில் நிம்மதி தவழும். செல்வம் பெருகும் என்பது ஐதீகம்!