ஆடி முதல்வெள்ளி… அம்மன் கோவில்களில் பக்தர்கள் வெள்ளம்
சென்னை: ஆடி மாதம் முதல் வெள்ளியையொட்டி இன்று தமிழகம் முழுவதும் உள்ள அம்மன் கோவில்களில் பெண் பக்தர்கள் பெருந்திரளாக வந்து தரிசனம் செய்தனர்.
அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்தும், பொங்கல் வைத்தும் ஏராளமான பக்தர்கள் அம்மனை வேண்டிக்கொண்டனர்.
ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதம் என்பதால் ஆடி மாத பிறப்பையொட்டி தமிழகத்தில் அனைத்து அம்மன் கோயில்களிலும் நேற்று காலை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
ஆடி வெள்ளி
ஆடி வெள்ளிக்கிழமைகளில் அம்மனை வழிபடுவது மிகச் சிறந்த நற்பலன்களை கொடுக்கும் என்பது ஐதீகம். அதுவும் அம்மனுக்கு உகந்த நாளான வெள்ளிக்கிழமைகளில் அம்மன் குளிர்ந்த மனதோடு கேட்கும் வரங்களை கொடுப்பாள் என்று நம்பிக்கை உள்ளதால் இந்த நாட்களில் அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகிறது. இந்த ஆடி வெள்ளி சிறப்பு வழிபாட்டில் பெண்கள் அதிக பக்தியுடன் பங்கேற்று தங்கள் வாழ்வில் வசந்தம் ஏற்பட அம்மனை வழிபடுகின்றனர்.
முதல் வெள்ளிக்கிழமை
இன்று ஆடி முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சென்னை மயிலாப்பூரில் உள்ள முண்டக்கண்ணியம்மன், கோலவிழி பத்ரகாளியம்மன், நாகாத்தம்மன் கோவில்களில் காலை முதலே பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பாம்பு புற்றில் பால் ஊற்றியும், சிலைகளுக்கு அபிசேகம் செய்தும் வழிபாடு நடத்தினர். முண்டகக்கண்ணியம்மன் கோவிலில் காலையில் இருந்தே சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
அகிலாண்டேஸ்வரி அம்மன்
இன்று ஆடி மாதம் முதல் வெள்ளிக்கிழமை என்பதால் திருவானைக்காவல் கோயிலில் அகிலாண்டேசுவரி அம்மன் சிறப்பு அலங்காரத்துடன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஆடி வெள்ளியையொட்டி இன்று மூலவர் அகிலாண்டேஸ்வரி அம்மன் தாழம்பூ பாவாடை, மலர்க்கிரீடம், காதுகளில் ஆதிசங்கரரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஸ்ரீசக்கரம் பொறிக்கப்பட்ட தாடகங்கள், கையில் தங்கக்கிளி மற்றும் திருஆபரணங்கள் அணிந்து சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இன்று அதிகாலை முதல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில நின்று அம்மனை வழிபட்டனர்.
சமயபுரம் மாரியம்மன்
திருச்சியில் சமயபுரம் மாரியம்மன், திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி, உறையூர் வெக்காளியம்மன், நார்த்தாமலை முத்துமாரியம்மன் உள்பட அனைத்து அம்மன் கோயிலில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
மடப்புரம் காளி கோவில்
திருப்புவனம் அருகே உள்ள மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலில் ஆடிவெள்ளியை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு செய்தனர் கோவிலுக்கு வந்த பக்தர்கள் எலுமிச்சை மாலை சாற்றியும், எலுமிச்சை விளக்கேற்றியும் அம்மனை வழிபட்டனர். பக்தர்களின் வசதிக்காக மதுரை, மானாமதுரை, சிவகங்கையில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.