ஆடி முதல் வெள்ளி... அம்மன் கோவில்களில் குவிந்த பக்தர்கள்... கூழ் ஊற்றி வழிபாடு
சென்னை: ஆடி மாதம் முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு அம்மன் ஆலயங்களில் அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. அம்மனுக்கு பாலபிஷேகம் செய்தும் கூழ் ஊற்றியும் பக்தர்கள் வழிபாடு நடத்தினர்.
ஆடிமாதம் என்பது அம்மன் கோவில்களுக்கு மிக உகந்தமாதம் ஆகும். இந்த மாதத்தில் அனைத்து அம்மன் கோவில்களிலும் தீமிதி திருவிழா, தேர்திருவிழா, சாக்கைஊற்றுதல்திருவிழா, செடல்திருவிழா, உள்ளிட்ட அனைத்து திருவிழாக்களும் நடைபெறும், குறிப்பாக இந்த மாதத்தில் உள்ள ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் அனைத்து கோவில்களிலும் சிறப்பு பூஜைகளும், அபிஷேக ஆராதனைகளும் நடைபெறுவது வழக்கம்.
சென்னை மயிலாப்பூரில் அமைந்துள்ள முண்டகக்கன்னியம்மன், கோலவிழி பத்ரகாளியம்மன் ஆலயங்களில் அதிகாலை முதலே சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. ஏராளமான பெண்கள் பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டனர்.
விளக்கேற்றி வழிபாடு
ஆடி கூழ் செய்து அம்மனுக்குப் படைத்து பக்கதர்களுக்கு பிரசாதமாக அளித்தனர். பாம்பு புற்றில் பால் ஊற்றியும், சிலைகளுக்கு அபிசேகம் செய்தும் வழிபாடு நடத்தினர். அம்மனுக்கு மா விளக்கேற்றியும் வழிபாடு நடத்தினர்.
காளிகாம்பாள் கோவில்
பாரிமுனை தம்பு செட்டி தெருவில் உள்ள காளிகாம்பாள் கோவிலில் அதிகாலை முதலே சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. ஏராளமானோர் பாலபிஷேகம் செய்தும், விளக்குகள் ஏற்றியும் அம்மனை வழிபட்டனர்.
சமயபுரம் மாரியம்மன்
திருச்சியில் சமயபுரம் மாரியம்மன், திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி, உறையூர் வெக்காளியம்மன், நார்த்தாமலை முத்துமாரியம்மன் உள்பட அனைத்து அம்மன் கோயிலில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
இருக்கன்குடி மாரியம்மன் கோவில்
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே அமைந்துள்ள இருக்கண்குடி மாரியம்மன் ஆலயத்தில் அதிகாலை முதலே குவிந்த பக்தர்கள் சிறப்பு பூஜையில் பங்கேற்றனர். குழந்தையில்லாதவர்கள் இந்த ஆலயத்திற்கு வந்து தொட்டில் கட்டி பிரார்த்தனை செய்தால் குழந்தை பிறக்கும் என்பது நம்பிக்கை. இதனால் ஏராளமான பக்தர்கள் ஆடி வெள்ளிக்கிழமைகளில் அம்மனை தரிசிக்க குவிந்துள்ளனர்.
மடப்புரம் காளி
திருப்புவனம் அருகே உள்ள மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலில் ஆடிவெள்ளியை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு செய்தனர் கோவிலுக்கு வந்த பக்தர்கள் எலுமிச்சை மாலை சாற்றியும், எலுமிச்சை விளக்கேற்றியும் அம்மனை வழிபட்டனர்.