முருகன் கோயில்களில் ஆடிக்கிருத்திகை விழா கோலாகலம்... பக்தர்கள் காவடி எடுத்து நேர்த்திக் கடன்
முருகன் கோயில்களில் ஆடிக்கிருத்திகை விழாவையொட்டி பக்தர்கள் காவடி எடுத்து நேர்த்திக் கடன் செலுத்தினர்.
சென்னை: முருகன் கோயில்களில் ஆடிக் கிருத்திகை விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி பக்தர்கள் காவடி எடுத்து நேர்த்திக் கடனை செலுத்தி வருகின்றனர்.
முருகனுக்கு மிகவும் உகந்த நாள் ஆடிக் கிருத்திகையாகும். இந்த விழா தமிழகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். கார்த்திகை நட்சத்திரம் முருகனின் நட்சத்திரமாகும். ஆறு கார்த்திகை பெண்கள் முருகனை சரவணப் பொய்கையிலிருந்து எடுத்து வளர்த்தனர்.
இவர்களை சிறப்பிக்கும் விதமாக ஆடிக் கிருத்திகை கொண்டாடப்படுகிறது. இந்த விழா திருத்தணி, பழனி, திருச்செந்தூர், சுவாமிமலை உள்ளிட்ட கோயில்களிலும் சென்னையில் வடபழனி, கந்தக்கோட்டம், திருப்போரூர், குமரக்கோட்டம், குன்றத்துார் ஆகிய ஆலயங்களிலும் கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி பக்தர்கள் ரயில் மற்றும் பேருந்துகள் மூலம் தங்கள் ஊருக்கு அருகில் உள்ள அறுபடை வீடுகளுக்கு சென்று வழிபடுவது வழக்கம். ஆடி பரணி நட்சத்திரமான நேற்றைய தினம் முருகனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
திருத்தணியில் முருகனுக்கு இன்று தங்க கவசமும், வைர கிரீடமும் பச்சை மரகதக் கல்லும் அணிவிக்கப்படுகிறது. இதையடுத்து சிறப்பு ஆராதனையும் நடைபெறும். நேற்று பரணிக்காகவும் இன்று ஆடிக் கிருத்திகைக்காகவும் பக்தர்கள் காவடிகளுடன் குவிந்துள்ளனர்.
கோயில்களில் இன்று அதிகாலை முதலே கூட்டம் குவிந்துள்ளதால் கோயில்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.