ஆடிக்கிருத்திகை: காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களுக்கு 28ல் உள்ளூர் விடுமுறை
காஞ்சிபுரம்: ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களுக்கு ஜூலை 28ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
ஆடி மாதம் வரும் கிருத்திகை நட்சத்திர நன்னாளில் முருகப்பெருமான் ஆலயங்களில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். திருத்தனி முருகன் ஆலயத்திற்கு ஏராளமான பக்தர்கள் ஆடிக்கிருத்திகை நாளில் வழிபாடு செய்ய வருகை தருவார்கள். இதனை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
திருத்தணி சுப்பிரமணியசுவாமி கோயிலில் வருகிற 28ம்தேதி(வியாழக்கிழமை) ஆடிக்கிருத்திகை விழா நடைபெறுகிறது. இதை முன்னிட்டு அன்று திருவள்ளுர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது. பள்ளி, கல்லூரிகள் செயல்படாது.
இந்த உள்ளூர் விடுமுறை நாட்கள் செலாவணி முறிச்சட்டம் 1881 கீழ் வராது என்பதால் மாவட்டத்தில் உள்ள கருவூலங்களும் சார் நிலை கருவூலங்களும் அரசு பாதுகாப்புக்கான அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு குறிப்பிட்ட பணியாளர்களோடு (28.07. 2016) தேதியில் செயல்பட வேண்டும்.
இந்த விடுமுறை நாளை ஈடுசெய்யும் பொருட்டு 06.08.2016 (சனிக்கிழமை) அன்று பணி நாளாக அறிவிக்கப்படுகிறது.
இந்த உள்ளூர் விடுமுறையானது திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் பொருந்தும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்துக்கு வருகிற 28ம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்தும், அதேபோல், வருகிற 30ம் தேதி பணி நாளாகவும் அறிவித்து அம் மாவட்ட ஆட்சியர் கெஜலட்சுமி உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் வட்டம் வல்லக்கோட்டையில் உள்ள முருகன் கோயில் ஆடி கிருத்திகையை முன்னிட்டு காஞ்சிபுரம் மாவட்டத்துக்கு வருகிற 28ம் தேதி உள்ளூர் விடுமுறை விடப்படுகிறது. அதேபோல், வருகிற 30ம் தேதி பணி நாளாகவும் செயல்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.