ஆடி கிருத்திகை: முருகன் ஆலயங்களில் காவடி சுமந்து பக்தர்கள் நேர்த்திக்கடன்
ஆடிக்கிருத்திகை இன்று முருகப்பெருமான் ஆலயங்களில் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பக்தர்கள் காவடி சுமந்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
சென்னை: ஆடி கிருத்திகையை முன்னிட்டு, முருகன் கோயில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. கோயில்களில் குவிந்த பக்தர்கள் அரோகரா முருகனை மனமுருக வழிப்பட்டனர்.
முருகப்பெருமானுக்கு உகந்த செவ்வாய்கிழமையான இன்று ஆடிக்கிருத்திகை விழா கொண்டாடப்படுவதால்
ஆலயங்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
முருகப்பெருமானுக்கு ஆண்டுதோறும் பல்வேறு விழாக்கள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இதில், ஆடி கிருத்திகை, கந்தசஷ்டி விரதம்,தைப்பூசம், தை கிருத்திகை, பங்குனி உத்திரம், ஆகியவை முக்கியமான விஷேசங்கள்.
ஆடிக்கிருத்திகை
ஆடி மாதத்தில் வரும் கிருத்திகை நட்சத்திரம், முருகனுக்கு உகந்த நட்சத்திரமாகும். பக்தர்கள் விரதம் இருந்து முருகன் கோயிலுக்கு சென்று மனமுருக வழிபாடுவார்கள். அதன்படி இன்று, தமிழகம் முழுவதும் உள்ள முருகன் கோயில்களில் சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் மற்றும் ஆராதனைகள் செய்யப்பட்டன.
அறுபடை வீடுகளில் தரிசனம்
முருகனின் அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழநி,சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்ச்சோலை ஆகிய கோயில்களில் பக்தர்கள் அதிகாலை முதலே குவிந்துள்ளனர். பால்குடம் எடுத்து வந்தும், காவடிகள் சுமந்து வந்தும் முருகனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர்.
சென்னை முருகன் ஆலயங்கள்
சென்னையில் வடபழனி, கந்த கோட்டம், குன்றத்தூர், சிறுவாபுரி, திருப்போரூர் கந்தசாமி முருகன் ஆலயங்களில் ஆடி கிருத்திகையை முன்னிட்டு அதிகாலையிலேயே ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் தோள்களில் காவடி சுமந்தும், உடலில் பல இடங்களில் அலகு குத்தியும் முருகனுக்கு நேர்த்திக் கடன் செய்தனர்.
வடபழனியாண்டவர்
வடபழனியில் முருகன் கோயிலில் ஆடி கிருத்திகையை முன்னிட்டு, இன்று அதிகாலை 3.30 மணியளவில் நடை திறக்கப்பட்டது. முருகனுக்கு சிறப்பு அலங்காரம், சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் செய்யப்பட்டது. பின்னர் முருகனுக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டது. பக்தர்கள் காலையில் இருந்தே குவியத் தொடங்கினர்.
பக்தர்கள் அரோகரா முழக்கமிட்டு வழிபட்டனர்.