பவானி கூடுதுரையில் ஆடிப்பெருக்கு - புதுமண தம்பதிகள் மகிழ்ச்சி - வீடியோ
மூன்று நதிகள் சங்கமிக்கும் பவானி கூடுதுரையில் மக்கள் ஆடிப் பெருக்கு விழாவை மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.
ஈரோடு: காவிரி ஆற்றங்கரைப் பகுதியில் ஆடிப்பெருக்கு விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. பவானி கூடுதுறையில் மக்கள் மகிழ்ச்சியுடன் ஆடிப்பெருக்கு விழாவைக் கொண்டாடினர்.
விவசாயத்துக்கு நீர் கொடுக்கும் காவிரியை வணங்கிப் போற்றும் விழா தான் ஆடிப்பெருக்கு அல்லது ஆடி பதினெட்டு. இந்த விழா காவிரி நதி பாயும் மேட்டூர், பவானி, ஈரோடு,பரமத்தி வேலூர், திருச்சி, குளித்தலை என பல இடங்களில் உற்சாகமாகக் கொண்டாடப்படும்.
இன்று பவானி கூடுதுறையில் ஆடிப்பெருக்கு விழா உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. பொதுமக்கள் கரையினில் வாழைஇலையில் தேங்காய், பழம், வெற்றிலை, பாக்கு, பூ, காதோலை கருகமணி வைத்து படையிலிட்டு வழிபட்டனர்.
மக்கள் ஆற்றங்கரையினில் காவிரி அன்னைக்கு படையிலிட்டு வணங்கினர். மேலும், பெண்கள் புது மஞ்சள் கயிறு அணிந்துகொண்டனர். ஆண்கள் தங்கள் வலதுகரத்தில் பூஜை செய்யப்பட்ட மஞ்சள் கயிற்றைக் கட்டிக்கொண்டனர்.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு காவிரியில் நீர் இல்லாமல், ஆடிப்பெருக்கு வெறிச்சோடியிருந்தது. இந்தாண்டு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்ட காரணத்தால் மக்கள் மகிழ்ச்சியுடன் ஆடிப்பெருக்கைக் கொண்டாடினர்.