வந்தது ஆடிப்பெருக்கு.. நீங்கியது தடை.. புன்னகை நாயகர்களாக மாறிய ஒகேனக்கல் பரிசல் ஓட்டிகள்!
ஒகேனக்கல்லில் ஆடிப்பெருக்கு விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
தருமபுரி: 25 நாட்களுக்கு பிறகு இன்றுதான் ஒகேனக்கல் பரிசல் ஓட்டிகள் முகத்தில் சிரிப்பே தென்பட்டது. இன்று ஆடிப்பெருக்கை முன்னிட்டு ஒகேனக்கலில் பரிசல் இயக்க விதிக்கப்பட்டிருந்த தடை தற்போது நீக்கப்பட்டதையடுத்து உற்சாகத்துடன் பரிசலை இயக்கினர்.
கர்நாடகத்திலிருந்து அபரிமிதமான அளவில் காவிரியில் தண்ணீர் வந்ததால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனால் பாதுகாப்பு காரணமாக பரிசல் இயக்குவதற்கு மாவட்ட நிர்வாகம் தடை போட்டது. சுற்றுலா பயணிகளையும் அங்கு குளிக்க வேண்டாம் என கேட்டுக் கொண்டது. இதனால் ஒகேனக்கல் களை இழந்து காணப்பட்டதுடன், சுற்றுலா பயணிகளும் உற்சாகமின்றி வந்து சென்றனர். பரிசல் ஓட்டிகளோ தங்கள் வாழ்வாதாரம் இதுதான் என்றும் பரிசல் ஓட்ட அனுமதியுங்கள் என்று மாவட்ட நிர்வாகத்திடமும் பரிதாபத்துடன் கேட்டுக் கொண்டே வந்தனர்.
பரிசல் இயக்க அனுமதி
இந்நிலையில் நேற்று முன்தினத்திலிருந்து படிப்படியாக நீர்வரத்து குறைய ஆரம்பித்தது. இருந்தாலும் யாருக்கும் எந்த ஆபத்தும் வந்துவிடக் கூடாது என்று மாவட்ட ஆட்சியர் மலர்விழி நேற்று ஒகேனக்கல்லில் பரிசலில் ஆய்வு நடத்தினார். இதனையடுத்து பரிசலை இயக்கவும், சுற்றுலா பயணிகள் குளிக்கவும் அனுமதி அளித்தார். மெயினருவியில் பாதுகாப்பு கம்பிகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு விட்டதால், அங்கு மட்டும் இன்னும் அனுமதி தரவில்லை.
3 நாட்கள் விழா
எனினும் பரிசல் இயக்கும் அறிவிப்பின் மகிழ்ச்சியுடன் இன்று ஆடிப்பெருக்கு விழாவும் சேர்ந்து கொண்டதால் ஒகேனக்கல் பகுதியே களை கட்டியது. 25 நாட்களுக்கு பிறகு சுறுசுறுப்பாகவும், முகமலர்ச்சியுடனும் பரிசலை இயக்க தொடங்கினர் தொழிலாளர்கள். இன்று முதல் 3 நாட்கள் ஆடிப்பெருக்கு விழா நடைபெற போவதால், அவர்கள் வரப்போகும் இந்த 3 நாளும் செம பிசியாக இருக்க போகிறார்கள்.
ஜொலித்த புதுமணப்பெண்கள்
தண்ணீர் வரத்து இப்போது சற்று அதிகமாக உள்ளது. ஒருவேளை இதுவே இன்னும் அதிகமாவிட்டால், மீண்டும் பரிசல் இயக்க தடா தான்! ஒகேனக்கல்லுக்கு இன்று வந்தவர்களில் பெரும்பாலானோர் புதுமண தம்பதிகள்தான். பட்டுசேலை, பூ, வளையல், புதுத்தாலியுடன் புதுமணப்பெண்கள் ஜொலி ஜொலித்தனர். இதேபோல ஏராளமானோர் இன்று ஆடிப்பெருக்கை முன்னிட்டு ஒகேனக்கல்லில் குவிந்திருந்தனர்.
ஜாலியாக குளித்தனர்
அனுமதி வழங்கிவிட்டாலும், சுற்றுலா பயணிகள் மீது மாவட்ட நிர்வாகம் ஒரு கண் வைத்துக்கொண்டேதான் உள்ளது. மெயினருவி செல்லும் பாதையின் அருகே சுற்றிலும் தடுப்புகள் அமைத்து குளிக்க அனுமதித்தனர். அதேபோல, தீயணைப்பு துறை வீரர்கள் மற்றும் போலீசார் ஆகியோர் கயிறு, ரிங் மற்றும் லைப்ஜாக்கெட்டுகளுடன் தீவிர கண்காணிப்பு பணியிலும் ஈடுபடுத்தப்பட்டனர். தொடர்ந்து நீர்வரத்தும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. எப்படியோ 25 நாட்களாக ஒகேனக்கல்லில் குளிக்க முடியாமல் தவித்து வந்த சுற்றுலா பயணிகள் இன்று ஜாலியாக குளித்து மகிழ்ந்து ஆடிப்பெருக்கை இனிதே கொண்டாடினார்கள்.