ஆடிப்பூரம் விழா: விருதுநகர், காஞ்சிபுரம் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை!
விருதுநகர் : ஆடிப்பூரம் விழா நாளை கொண்டாடப்படுவதை முன்னிட்டு விருதுநகர், காஞ்சிபுரம் மாவட்ட கல்வி நிறுவனங்களுக்கு நாளை உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அ. சிவஞானம் விடுத்துள்ள அறிக்கை:
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர தேரோட்டம் ஆகஸ்ட் 5இல் நடைபெற உள்ளது. இத்தேரோட்ட விழாவில் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த அனைவரும் கலந்து கொள்ளும் வகையில் அன்று மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது என அதில் தெரிவித்துள்ளார்.
மேல்மருவத்தூர் ஸ்ரீஆதிபராசக்தி பீடத்தில் வருகிற 5ம் தேதி ஆடிப்பூர விழா நடைபெறுகிறது. இதையொட்டி அன்றைய தினம் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்திருந்து அம்மனை தரிசனம் செய்வார்கள்.
ஆடிப்பூர விழாவில் நடைபெறும் சிறப்பு பூஜை மற்றும் அபிஷேகங்களை தரிசிக்க தமிழகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள், விரதம் இருந்து அம்மனை தரிசிப்பார்கள். அன்று நடைபெறும் பூஜையில் கலந்து கொண்டு ஊர் திரும்புவார்கள்.
அன்று காலையில் இருந்தே அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். சிறப்பு வேள்விகள் நடத்தப்படுகின்றன. அம்மனுக்கு விசேஷ அலங்காரங்களும் பரிகார பூஜைகளும் நடைபெறும்.
ஓம் சக்தி கோஷம் முழங்க, லட்சக்கணக்கான பக்தர்கள் தமிழகம் முழுவதும் இருந்து வேன், பஸ்களில் ஒன்றாகச் சேர்ந்து ஆலயத்துக்கு வந்து, மகாசக்தியை வழிபடுவதைப் பார்ப்பதே சிலிர்ப்புக்கு உரிய ஒன்றாக இருக்கும்.
இந்த ஆடிப்பூர நன்னாளை முன்னிடு, 5ம் தேதி காஞ்சிபுரம் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கஜலட்சுமி விடுத்துள்ள அறிக்கை:
செய்யாறு வட்டம் மேல்மருவத்தூர் ஆதி பராசக்தி சித்தர் பீடத்தில் ஆடிப்பூரம் திருவிழா அடுத்த மாதம் 5ம் தேதி நடைபெற உள்ளது. அன்றைய தினம் உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதை ஈடுசெய்ய 27ம் தேதி (சனிக்கிழமை) அன்று அரசு அலுவலகங்களுக்கு பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.