சங்கரன்கோவிலில் ஆடி தபசு விழா... நாளை கொடியேற்றத்துடன் தொடக்கம்
சங்கரன்கோவில்: சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயிலின் ஆடித்தபசு திருவிழா நாளை 20ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. 28ம் தேதி தேரோட்டமும், 30ம் தேதி தபசு காட்சியும் நடக்கிறது.
நெல்லை மாவட்டத்தில் புகழ்பெற்ற சிவஸ்தலங்களில் சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயிலும் ஒன்று. இங்கு ஆண்டுதோறும் ஆடி மாதம் 12 நாட்கள் ஆடித் தபசு திருவிழா சிறப்பாக நடப்பது வழக்கம். இந்த ஆண்டின் ஆடித்தபசு திருவிழா நாளை 20ம் தேதி அதிகாலை 5.30 மணிக்கு மேல் மணிக்குள் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
விழாவில் தினமும் காலை நேரங்களில் கோமதி அம்பாள் அலங்கரிக்கப்பட்ட சப்பரங்களில் எழுந்தருளி ரதவீதி உலாவும், மாலையில் சமுதாய மண்டகப்படி கட்டிடங்களுக்கு வெள்ளி சப்பரத்தில் அம்பாள் எழுந்தருளும் நிகழ்ச்சியும் நடக்கிறது. விழாவில் 9ம் நாளான 28ம் தேதி காலை 9 மணியளவில் கோமதி அம்மனின் திருத் தேரோட்டம் நடக்கிறது.
வரும் 30ம் தேதி ஆடித்தபசு திருவிழா நடக்கிறது. அன்று காலை சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனையை தொடர்ந்து, கோமதி அம்பாள் தங்கச் சப்பரத்தில் தவக்கோலத்தில் எழுந்தருளி தெற்கு ரத வீதியில் உள்ள தவசு மண்டபத்திற்கு சென்று தபமிருக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.
அன்று மாலை கோயிலில் இருந்து சுவாமி சங்கரநாராயணராக ரிஷப வாகனத்தில் எழுந்தருளி தெற்கு ரத வீதி தவசு பந்தலை அடைந்ததும், அங்கு மாலை 6 மணிக்கு அம்பாளுக்கு சுவாமி சங்கரநாராயணராக காட்சி கொடுக்கும் ஆடித்தவசு விழா நடக்கிறது. இதனைத் தொடர்ந்து அம்பாள் மீண்டும் தவசு மண்டபத்தில் தவமிருக்கச் சென்றதும், இரவு 12 மணி அளவில் கோவிலில் இருந்து சுவாமி சங்கரலிங்கராக வெள்ளி யானை வாகனத்தில் எழுந்தருளி அம்பாளுக்கு சங்கரலிங்க சுவாமியாக காட்சி கொடுக்கும் இரண்டாம் தவசு காட்சி நடக்கிறது.
ஆடித்தபசு திருவிழாவை காண தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பல லட்சம் பக்தர்கள் வருவர். ஏற்பாடுகளை கோவில் அதிகாரிகள் மற்றும் அனைத்து சமுதா மண்டகப்படிதாரர்கள் செய்து வருகின்றனர்.