சங்கரன் கோவில் சங்கரநாராயணர் கோவில் திருவிழா - ஆக.16ல் ஆடித்தபசு
சங்கரன்கோவில்: சங்கரன்கோவில் சங்கரநாராயணர் கோயிலில் ஆடித்தபசு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆகஸ்ட் 14ம் தேதி தேரோட்டமும், 16ம் தேதி தபசு காட்சி நடைபெற உள்ளது.
நெல்லை மாவட்டம், சங்கரன்கோவில் சங்கரநாராயணர் கோயிலில் ஆடித்தபசு திருவிழா ஒவ்வொரு ஆண்டும் விமர்சையாக நடைபெறும். சைவ, வைணவ சமய பேதங்களைக் கடந்து, சமரசத்தை நிலைநாட்டும் ஸ்தலமாக, சங்கரன்கோவில் சங்கரநாராயணர் ஆலயம் திகழ்கிறது.
இங்கு ஆண்டுதோறும் ஆடி மாதம் உத்திராடம் நட்சத்திரத்தில், அம்பாள் தவத்தின் பயனாக, சுவாமி திருக்காட்சி அளிக்கும் வைபவம் ஆடித் தபசு திருவிழா 12 நாட்கள் கொண்டாடப்படுகிறது.
கொடியேற்றம்
இந்த ஆண்டுக்கான திருவிழா, கோமதி அம்மன் சன்னதி முன்பு கொடியேற்றத்துடன் சனிக்கிழமையன்று தொடங்கியது கொடியேற்றத்தை தொடர்ந்து அம்பாள் தந்த பல்லக்கில் எழுந்தருளினார். ஆடித்தபசு திருவிழாவின் 10 நாட்களும் காலையில் விதவிதமான அலங்காரங்களிலும், மாலையில் வெள்ளி சப்பரத்தில் மண்டகப்படி கட்டிடத்திற்கும் அம்பாள் எழுந்தருளுகிறார்.
ஆகஸ்ட் 14ல் தோரோட்டம்
ஒவ்வொரு நாளும் இரவு சமுதாய மண்டகப்படி கட்டிடத்தில் இருந்து ஒவ்வொரு வாகனத்தில் கோமதி அம்பாள் வீதி வலம் வருகிறார். 9ம் நாள் திருவிழாவான ஆகஸ்ட்14ம் தேதி அம்பாள் தேரோட்டம் நடக்கிறது.
தபசு காட்சி
ஆகஸ்ட் 16ம் தேதி தபசு தினத்தன்று கோமதி அம்மன், சங்கரலிங்கசுவாமி, சங்கர நாராயண சுவாமி ஆகிய உற்சவ மூர்த்திகளுக்கு விசேஷ அபிஷேகம், அலங்காரம் நடக்கிறது. இதனைத் தொடர்ந்து கோமதி அம்பாள் தங்கசப்பரத்தில் தவக்கோலத்தில் எழுந்தருளி தெற்கு ரத வீதியில் உள்ள தபசு மண்டபத்திற்கு சென்று தவமிருக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.
சங்கரநாராயணராக காட்சி
ஆகஸ்ட் 16ம் தேதி மாலை கோயிலில் இருந்து சுவாமி சங்கநாராயணராக ரிஷப வாகனத்தில் எழுந்தருளி தெற்கு ரத வீதி தபசு பந்தலை அடைந்ததும், அங்கு மாலை 6 மணிக்கு அம்பாளுக்கு சுவாமி சங்கரநாராயணராக காட்சி கொடுக்கும் ஆடித்தபசு விழா நடக்கிறது.
சங்கரலிங்க சுவாமியாக காட்சி
அம்பாள் மீண்டும் தபசு மண்டபத்தில் தவமிருக்க சென்றதும், இரவு 12 மணி அளவில் கோயிலில் இருந்து சுவாமி சங்கரலிங்கராக வெள்ளி யானை வாகனத்தில் எழுந்தருளி அம்பாளுக்கு சங்கரலிங்க சுவாமியாக காட்சி கொடுக்கும் இரண்டாம் தவசு காட்சி நடக்கிறது.