சங்கரன்கோவிலில் இன்று ஆடித்தபசு... லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்
திருநெல்வேலி: நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலில் உள்ள ஸ்ரீகோமதி அம்பாள் ஆலயத்தில், இன்று செவ்வாய்க்கிழமை ஆடித்தபசு விழா கோலாகலமாக நடைபெறுவதை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர்.
சைவ - வைணவ ஒற்றுமையை வலியுறுத்தும் கோயில்களில் சங்கரன்கோவிலும் ஒன்று. ஹரியும் சிவனும் ஒன்றுதான் என்பதை பக்தர்களுக்கு உணர்த்தும் பொருட்டு சிவபெருமான், கோமதி அம்பாளுக்கு சங்கரநாராயணராகவும், சங்கரலிங்க மூர்த்தியாக திருக்காட்சி தந்த திருத்தலம் இது.
அம்பாளின் தவத்தில் மகிழ்ந்து, சங்கரநாராயணராக காட்சி தந்ததையே ஆடித்தபசு விழா என்று கொண்டாடுகிறோம். இந்தத் திருவிழா வருடந்தோறும் ஆடி மாதம் நடைபெறுவது வழக்கம்.
சங்கரன்கோவில் திருவிழா
இந்த ஆண்டுக்கான ஆடித்தபசு விழாவானது கொடியேற்றத்துடன் துவங்கி, தினமும் காலையும் மாலையும் அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள், திருவீதியுலா தரிசனங்கள் என அமர்க்களப்படுகிறது ஆலயம். இந்தத் திருவிழா 17ம் தேதி வரை நடைபெறுகிறது.
தேரோட்டம்
ஆடித்தபசு திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான திருத்தேரோட்டம் ஞாயிறன்ற நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டார்கள்.
ஆடிச்சுற்று
கொடியேற்றம் தொடங்கி ஆடித்தபசு வரைக்கும் ஏராளமான பக்தர்கள் சங்கரன்கோவிலுக்கு வந்து ஆடிச்சுற்று சுற்றி அம்மனை வழிபட்டு வருகின்றனர். தினசரியும் கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.
ஆடித்தபசு
விழாவின் முக்கியமான வைபவமான ஆடித்தபசு விழாவானது இன்று மாலை நடைபெறுகிறது. இன்று காலை கோவிலில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், மஹா தீபாராதனை, நடைபெற்றது. இதைத் தொடர்ந்து அம்பாள் தவக்கோலத்தில் தங்கசப்பரத்தில் எழுந்தருளி வீதியுலாவாக தெற்கு ரத வீதியில் உள்ள தபசு மண்டபத்திற்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்றது.
அம்மன் வீதி உலா
மாலை 4 மணிக்கு கோவிலில் இருந்து சுவாமி சங்கரநாராயணராக அலங்கரிக்கப்பட்ட வெள்ளி வாகனத்தில் எழுந்தருளி தெற்கு ரத வீதி தபசு மண்டபத்துக்கு சென்றதும் கோமதி அம்பாளுக்கு சங்கரநாராயணராக காட்சி கொடுக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.
தபசு காட்சி
இதை தொடர்ந்து சுவாமி கோவிலுக்கும், அம்பாள் தபசு மண்டபத்துக்கும் செல்லும் நிகழ்ச்சியும் இரவு 12 மணிக்கு சுவாமி சங்கரலிங்கராக வெள்ளி வாகனத்தில் எழுந்தருளி அம்பாளுக்கு காட்சி கொடுக்கும் இரண்டாம் தபசு காட்சியும் நடைபெறுகிறது.
இதனைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள் சங்கரன்கோவிலில் குவிந்துள்ளனர். ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.