சங்கரன்கோவில்: ஆடித்தபசு தேரோட்டம் கோலாகலம்
சங்கரன்கோவில்: சங்கரன்கோவில் ஆடித்தபசு தேரோட்டம் இன்று காலை கோலாகலமாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வடம்பிடித்து தேர் இழுத்தனர்.
முக்கிய நிகழ்ச்சியான தபசு காட்சி சனிக்கிழமை நடக்கிறது. இதைக் காண ஏராளமான பக்தர்கள் சங்கரன் கோவிலுக்கு வருகை தருவார்கள்.
தமிழக சிவ தலங்களில் சங்கரன்கோவில் சங்கர நாராயண சுவாமி கோவிலும் ஒன்று.மதுரை ஆண்ட உக்கிரமபாண்டிய மன்னரால் பதினொன்றாம் நூற்றாண்டில் எழுப்பப்பட்ட கோவில் இது.
அரியும் சிவனும் ஒன்று
அரியும் சிவனும் ஒன்றென உலகிற்கு உணர்த்திய தலம் சங்கரன் கோவில்[சங்கர நைனார் கோவில்]. தனது ஒருபாகத்தை உடன் பிறந்தவருக்கு விட்டுக்கொடுத்து பிறந்த வீட்டுப் பெருமையையும், புகுந்த வீட்டு தியாகத்தையும் நிலைநிறுத்தியவள் அன்னை பார்வதி. 'அரியும், சிவனும் ஒன்றே என்ற தத்துவத்தை உணர்த்தும் வகையில், சங்கரன் கோமதியம்மனுக்கு சங்கர நாராயணராக காட்சி தந்த ஆடித்தபசு விழா வரும் சனிக்கிழமை நடைபெற உள்ளது.
ஆடித்தபசு கொடியேற்றம்
சங்கரன்கோவில் சங்கரநாராயணசுவாமி கோவிலில் ஆடித்தபசு திருவிழா கடந்த 30ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து 12 நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் தினமும் காலை கோயிலில் இருந்து கோமதிஅம்பாள் சிவலிங்க தரிசன அலங்காரம், சிவலிங்க பூஜை அலங்காரம், தமிழ்மறை ஓதுதல் அலங்காரம், யோகாசனம் ஆத்தமார்த்த பூஜை அலங்காரம். கோஷம்ரட்சனை அலங்காரம், வீணாகானம் அலங்காரம் ஆகிய திருக்கோலங்களில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
பக்தர்களின் ஆடிச்சுற்று
ஆடித் தபசு கொடியேறிய பின் 'ஆடிச்சுற்று' என்ற பெயரில், பக்தர்கள் கோயிலை 101, 501, 1001 என்ற எண்ணிக்கையில் சுற்றி நேர்ச்சை செலுத்துவார்கள். ஆடிச்சுற்று சுற்றுவதால், ஒரு காலில் நின்று தபசு காட்சி காணும் அம்பாளின் கால் வலியை தாம் ஏற்பதாக பக்தர்கள் நம்புகின்றனர்.
தேரோட்டம் கோலாகலம்
9ம் திருநநாளான இன்று காலை தேரோட்டம் நடந்தது. இதையொட்டி அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு அம்பாளுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. தொடர்ந்து அதிகாலை 5 மணிக்கு அம்பாள் தேரில் எழுந்தருளினார். பின்னர் காலை 10.20மணிக்கு தேர் வடம்பிடித்து இழுக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வடம்பிடித்து தேர் இழுத்தனர்.
ஆடித்தபசுக் காட்சி
முக்கிய நிகழ்ச்சியான ஆடித்தபசு நாளை மறுநாள் (9ம்தேதி) நடக்கிறது. இதையொட்டி அன்று காலை யாகசாலை மண்டபத்தில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம், தீபாராதனை நடக்கிறது. பின்னர் 11 மணி அளவில் கோமதி அம்பாள் தவக்கோலத்தில் தங்க சப்பரத்தில் வீதிஉலா சென்று தெற்கு ரதவீதியில் உள்ள தபசு மண்டபத்தில் எழுந்தருளுகிறார். மாலை 4 மணி அளவில் கோயிலில் இருந்து சுவாமி, சங்கரநாராயணர் திருக்கோலத்தில் வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி தெற்குரதவீதியில் மாலை 6 மணிக்கு கோமதி அம்பாளுக்கு காட்சி அளிக்கும் ‘‘ஆடித்தபசு காட்சி‘‘ வைபவம் நடக்கிறது.
பக்தர்கள் நேர்த்திக்கடன்
அம்பாளின் தபசுக் காட்சியின்போது பக்தர்கள் பருத்தி, மிளகாய் வத்தலையும், விவசாயிகள் நெல், சோளம், கம்பு, மிளகாய்வத்தல், பஞ்சு, பூ என வயலில் விளைந்த பொருட்களை 'சூறை விடுதல்' என்ற பெயரில் அம்பாள்மீது வீசியெறிந்து நேர்த்திக்கடனைச் செலுத்துகிறார்கள்.
வெள்ளி யானை வாகனத்தில்
பின்னர் நள்ளிரவு 12 மணிக்கு வெள்ளி யானை வாகனத்தில் சங்கரலிங்க சுவாமியாக அம்பாளுக்கு காட்சி அளிக்கும் 2ம் தபசு காட்சி நடக்கிறது. இந்த விழாவில் பங்கேற்க லட்சக்கணக்கான பக்தர்கள் சங்கரன்கோவிலுக்கு வருகை தருவார்கள்.
புற்றுமண் பிரசாதம்
சங்கரன்கோவில் பாம்புகள்[சங்கன்,பதுமன்] வழிபட்ட கோயில் என்பதால் இங்கு புற்று இருக்கிறது. புற்று மண்தான் பிரதான பிரசாதம். நோயுள்ளவர்கள் இந்த மண்ணை நீரில் கரைத்து சாப்பிடுகின்றனர். சரும நோய்கள் நீங்கும். மேலும் வீடுகளில் பூச்சி, பல்லி, வயல்களில் பாம்புத் தொல்லை இருந்தால் மூலவர் சங்கரலிங்கனாருக்கு வேண்டிக் கொண்டு, அந்தந்த பூச்சிகளின் உருவங்களை வாங்கி உண்டியலில் காணிக்கையாக அளித்தால் தொல்லை நீங்கும்.