ஆடிப்பூரம்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் தேரோட்டம் கோலாகலம்
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஆடிப்பூரத்தை முன்னிட்டு ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் கோயில் தேரோட்டம் இன்று காலை வெகு விமரிசையாக நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஸ்ரீவில்லிபுத்தூரில் குவிந்துள்ளதால் நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம்,ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் ஆண்டாள் பிறந்த நட்சத்திரமான பூரம் தினத்தன்று ஆண்டாள் கோயில் தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு ஆடிப்பூர தேரோட்ட விழாவிற்கான நிகழ்ச்சிகள் கடந்த 28ம் தேதி துவங்கின. ஆண்டாள், ரெங்கமன்னார் தினமும் பல்வேறு அலங்காரங்களில் காட்சி அளித்தனர்.
ஆடிப்பூரம் தினமான இன்று காலை 8 மணி அளவில் திருத்தேரோட்டம் தொடங்கியது. இதில், தமிழக அமைச்சர்கள், அறநிலையத் துறை உயர் அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டு தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர். ஆடி அசைந்து வரும் திருத்தேரினை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கண்டு தரிசித்து வருகின்றனர்.
ஆடிப்பூரம் தேரோட்டத்தை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது. தேரோட்டத்திற்கு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் வருவார்கள் என்பதால் தேர் வரும் ரத வீதிகளில் கண்காணிப்பு கோபுரம் அமைக்கப்பட்டு ஏராளமான போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
முக்கிய இடங்களில் அதி நவீன கேமராக்கள் அமைத்து கண்காணிக்கின்றனர். நகரில் உள்ள டாஸ்மாக் கடைகள் நாளை ஒருநாள் அடைக்கப்படுகின்றன.
தேரோட்டத்தை முன்னிட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. தேர் சக்கரம் பதியாமல் இருக்க பல லட்சம் மதிப்புள்ள இரும்பு பிளேட்டுகளை ராம்கோ நிறுவனத்தினர் வழங்கியுள்ளனர்.