விஷவாயு தாக்கி 3 பேர் பலி: ஹோட்டல் நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க ஆம்ஆத்மி வலியுறுத்தல்
சென்னை: மூன்று தொழிலாளர்களை கழிவுநீர் தொட்டிக்குள் இறக்கி சுத்தம் செய்ய பணித்த ஹோட்டல் நிர்வாகத்தினரை கைது செய்ய வேண்டும் என்று தமிழக ஆம்ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளர் வசீகரன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்வதற்காக தொட்டிக்குள் இறங்கிய தொழிலாளர்கள் மூன்று பேர் விஷவாயு தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் சென்னை, பெரம்பூர் ரயில் நிலையம் அருகில் உள்ள சங்கீதா ஹோட்டலில் நடந்துள்ளது.
இறந்த தொழிலாளர்கள் மூன்று பேரும் வெளி மாநிலங்களிலிருந்து வேலைக்காக இங்கு வந்து அதே ஹோட்டலில் தங்கி வேலை செய்து வந்தவர்கள். ஹோட்டல் நிர்வாகத்தின் நிர்ப்பந்தத்தின் காரணமாக கழிவு நீர் தொட்டிக்குள் இறங்கி சுத்தம் செய்யும் போது விஷவாயு தாக்கி மூவரும் இறந்துள்ளனர்.
இத்தொழிலாளர்களின் இறப்பிற்கு ஹோட்டல் நிர்வாகமும் அரசு அதிகாரிகளுமே காரணம்,
மனிதா்கள் கழிவு நீர் தொட்டிக்குள் இறங்கி சுத்தம் செய்வதை தடுக்கும் சட்டம் 2013 ஆண்டு முதல் நடைமுறையில் உள்ளது அப்படி இருந்தும் இச்சட்டத்தை எந்த தனியார் நிறுவனங்களும் இதன்படி நடப்பதில்லை.
சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளும் இச்சட்டத்தை பற்றி கவலைபடுவதில்லை லஞ்சம் பெற்றுக்கொண்டு சென்றுவிடுவார்கள், இதனால் தொடர்ந்து தமிழகத்தின் பல இடங்களிலும் கழிவு நீர் சுத்தம் செய்யும் போது விஷ வாயு தாக்கி பலர் இறக்கும் நிலை உள்ளது. எனவே ஹோட்டல் நிர்வாகம் மற்றும் தவறு செய்த சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆகியோரை தமிழ்நாடு மேனுவல் ஸ்கேவஞ்சிங் சட்டத்தின்படி கைது செய்து தண்டிக்க வேண்டும்.
உயிரிழந்த மூன்று தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்கிட வேண்டும், தொழிலாளர் பாதுகாப்பு சட்டம் முறையாக அமலாவதை கண்காணிக்க தவறிய அரசு அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் இதுபோன்ற உயிரிழப்பு சம்பவங்கள் இனியும் நடக்காமல் தடுத்திட தமிழக அரசு தகுந்த நடவடிக்கைகளை எடுத்திட வேண்டும் என தமிழக ஆம்ஆத்மிகட்சி கேட்டுக்கொள்கிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.