ஹைகோர்ட்டில் விவாகரத்து கேட்ட ஆம்பூர் பவித்ரா... அறிவுரை கூறிய நீதிபதிகள்
சென்னை: கணவருடன் ஒழுங்காக குடும்பம் நடத்தியிருந்தால் இவ்வளவு பிரச்னைகள் இருந்திருக்காது என்று ஆம்பூர் கலவரத்திற்கு காரணமான பவித்ராவிற்கு உயர்நீதிமன்ற நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர். கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்று தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்த பவித்ராவிடம், "விவாகரத்து என்ன கடைகளில் கிடைக்கும் பொருளா? " எனவும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
வேலூர் மாவட்டம் பள்ளி கொண்டா குச்சிபாளையத்தை சேர்ந்த பழனியின் மனைவி பவித்ரா. இவர் மாயமானது தொடர்பாக ஆம்பூரை சேர்ந்த ஷமீல் அகமது விடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதன் பின்னர் வீடு திரும்பிய ஷமீல் அகமது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் கடந்த ஜூன் 26ம் தேதி உயிரிழந்தார்.
இதனைத தொடர்ந்து 27ம் தேதி பெரும் கலவரம் வெடித்தது. போலீஸ் வாகனங்கள் தீக்கிரையனது. இச்சம்பவத்தை அடுத்து பள்ளிகொண்டா போலீஸ் இன்ஸ்பெக்டர் மார்ட்டின் பிரேம்ராஜ் உள்ளிட்ட 7 போலீசார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
போலீஸ் விசாரணையில் மாயமான பவித்ராவுக்கு ஷகில் அகமதுவுடன் தொடர்பு இருந்தது உறுதி செய்யப்பட்டது. எனினும் அவர் எங்கு இருக்கிறார்? என்ன ஆனார்? என்பது தெரியாமல் மர்மமாக இருந்தது. இதுதொடர்பாக பவித்ராவின் கணவர் பள்ளி கொண்டா போலீஸ் நிலையத்தில் புகார் செய்திருந்ததுடன் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றையும் தாக்கல் செய்திருந்தார்.
இந்த கலவர வழக்கையும், பவித்ரா மாயமான வழக்கையும், சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். பவித்ராவை கண்டுபிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. செல்போன் மூலமாக துப்பு துலக்கி சென்னையில் பதுங்கி இருந்த பவித்ராவை சனிக்கிழமையன்று மீட்டனர். ஞாயிறன்று வேலூர் நீதிமன்றத்தில் பவித்ரா ஆஜர் படுத்தப்பட்டார். அவரை காப்பகத்தில் தங்க வைக்க உத்தரவிடப்பட்டது. இதைத் தொடர்ந்து வேலூர் அருகே உள்ள அரியூர் பெண்கள் காப்பகத்தில் நேற்றிரவு பவித்ரா தங்க வைக்கப்பட்டார்.
இன்று காலை 7 மணிக்கு உயர்நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக பவித்ராவை போலீசார் சென்னைக்கு அழைத்து வந்தனர். அவரது கணவர் மற்றும் குடும்பத்தினரும் உடன் அழைத்து வரப்பட்டனர். மதியம் 12 மணிக்கு வழக்கு நீதிபதிகள் தமிழ்வாணன், சி.பி.செல்வம் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அவர்கள் முன்பு பவித்ரா. ஆஜர்படுத்தப்பட்டார். அவரது பெற்றோர், கணவர், குழந்தையும் நீதிமன்றத்திற்கு வந்திருந்தனர்.
பவித்ராவை நீதிபதிகள் அருகில் அழைத்து விசாரித்தனர். அப்போது உன்னை யாராவது சட்ட விரோதமாக அழைத்து வந்தார்களா? என்று கேட்டனர். அதற்கு இல்லை என்று பவித்ரா பதிலளித்தார்.
உன் குழந்தை இப்போது யாருடன் இருக்கிறது என்று நீதிபதிகள் கேட்டதற்கு கணவர் பழனியுடன் இருப்பதாக கூறினார் பவித்ரா. கணவருடன் செல்ல விரும்புகிறாயா என்று நீதிபதிகள் கேட்டதற்கு, இல்லை எனக்கு விவாகரத்து வேண்டும் என்று கூறினார் பவித்ரா.
அப்போது குறுக்கிட்டு பேசிய அரசு வழக்கறிஞர் தம்பித்துரை, இந்த பெண்ணால் ஆம்பூரில் பிரச்சினை ஏற்பட்டு ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று தெரிவித்தார்.
நீதிபதிகள் அறிவுரை
இதனையடுத்து பவித்ராவிற்கு அறிவுரை வழங்கிய நீதிபதிகள், திருமணம் ஆன பின்பு கணவருடன் தான் வாழ வேண்டும். உன்னால் தான் எல்லா பிரச்சினை. உனக்கும், ஷமீலுக்கும் ஏற்கனவே திருமணம் ஆகவில்லை என்றால் இப்போது சந்தோஷமாக வாழ சட்டம் அனுமதிக்கும். ஆனால் உனக்கு ஏற்கனவே தாய் மாமனுடன் திருமணமாகி குழந்தை இருக்கிறது. ஷகில் அகமதுவுக்கும் திருமணம் ஆகி விட்டது. திருமணம் ஆனவருடன் சென்றதால் தான் உனக்கும், ஷமீல் அகமது குடும்பத்துக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று கூறினர்.
கலவரம் ஏற்பட்டது ஏன்?
ஆனால் நீதிபதியின் அறிவுரையை ஏற்காத பவித்ரா தனக்கு விவாகரத்து வேண்டும் என்று திரும்பவும் கேட்டார். அதற்கு நீதிபதிகள், விவாகரத்து என்ன பெட்டிக் கடையிலா கிடைக்கிறது. நினைத்தவுடன் வாங்கிக் கொள்வதற்கு? பெற்றோர் கஷ்டப்பட்டு திருமணம் செய்து வைக்கிறார்கள். கணவனுடன் தான் வாழ வேண்டும். திருமணமானவருடன் நட்பு வைத்ததால் தான் இவ்வளவு பெரிய பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதனால்தான் சாதி கலவரம், மத கலவரம் ஏற்படுகிறது என்றனர். தமிழகம் அமைதியான மாநிலமாக திகழ்கிறது. இதுபோன்ற பிரச்சினையால் தேவையில்லாத கலவரம் ஏற்பட்டுள்ளது என்றும் வேதனையுடன் கூறினர்.
கலவரம் தேவையற்றது
தொடர்ந்து நீதிபதியிடம் கூறிய அரசு வக்கீல் தம்பித்துரை, கலவரத்தால் ரூ.50 லட்சம் சொத்து சேதம் ஏற்பட்டுள்ளது. ஷகில் அகமது போலீஸ் காவலில் சாகவில்லை, மருத்துவமனையில் தான் உயிரிழந்து விட்டதாக கூறினார். அப்போது குறுக்கிட்டு பேசிய நீதிபதிகள், அது நடந்தது நடந்ததாக இருக்கட்டும். அது முடிந்து போன பிரச்சினை. பவித்ரா இப்போது பெற்றோருடன் செல்லட்டும். அவர்களுடன் சேர்ந்து வாழட்டும் என்று கூறினர். அதற்கு முதலில் சம்மதம் சொன்ன பவித்ரா பெற்றோருடன் செல்ல மறுத்ததால் மீண்டும் காப்பகத்தில் சேர்க்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
சட்ட கொண்டு வரவேண்டும்
திருமணமான பிறகு பெண்ணுக்கு வேறு நபருடன் தொடர்பு ஏற்படுவதால் பிரச்னை எழுகிறது என்றும், இதுபோன்ற சூழலில் பிரச்னையை தடுக்க சட்டத்திருத்தம் கொண்டு வர வேண்டும் என்றும் நீதிபதிகள் கூறினர். அப்போது, அரசு வழக்கறிஞர், சட்டம் கொண்டு வருவது தொடர்பாக தமிழக அரசிடம் கேட்டு தெரிவிப்பதாக கூறினார். இதையடுத்து வழக்கு விசாரணையை 2 வாரத்திற்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்